ஈழத் தமிழர்களுக்கு பாத்திரம், உணவுப் பொருட்கள் அனுப்ப கருணாநிதி உத்தரவு
சென்னை: இலங்கையில் போர் பாதிப்புக்குள்ளாகியுள்ள 40 ஆயிரம் தமிழர்கள் குடும்பங்களுக்கு அரிசி, பருப்பு உள்ளிட்ட உணவுப் பொருட்களையும், பாத்திரங்களையும் அனுப்ப முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
இலங்கையில் பாதிப்புக்குள்ளான தமிழ் மக்களுக்கு நிவாரணம் அளிப்பதற்காக தமிழக அரசின் சார்பில் முதல்-அமைச்சர் கருணாநிதி அக்டோபர் மாத இறுதியில் திரட்டத் தொடங்கிய நிவாரண நிதியில் மொத்தமாக 50 கோடியே 53 லட்ச ரூபாய் சேர்ந்து அது அரசு கணக்கிலே வரவாக வைக்கப்பட்டது.
அந்தத் தொகையிலிருந்து இதுவரை 10 கோடியே 7 லட்சம் ரூபாய்க்கான நிவாரணப் பொருட்கள் இந்திய அரசின் அனுமதியோடு இலங்கையிலே உள்ள இந்தியத் தூதரகத்திற்கு அனுப்பப்பட்டு, அங்குள்ள செஞ்சிலுவைச் சங்கத்தின் பன்னாட்டுக் குழு மூலமாக பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு முறையாக விநியோகிக்கப்பட்டது.
2-வது கட்ட உதவி
தற்போது, இலங்கையில் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கும் நாற்பதாயிரம் தமிழ்க் குடும்பங்களுக்கு உணவுப் பொருட்கள் மற்றும் சமையல் பாத்திரங்கள் உடனடியாகத் தேவையென தெரிவிக்கப்பட்டுள்ளதால் - முதல்-அமைச்சர் கருணாநிதி அதற்கான ஏற்பாடுகளை செய்து அவைகளை அனுப்பிவைக்குமாறு பிறப்பித்த ஆணைக்கிணங்க -
அரிசி, பருப்பு, டீத்தூள், சர்க்கரை போன்ற உணவுப் பொருள்களுடன், குளிப்பதற்கான சோப்பு, துவைப்பதற்கான சோப்பு, பற்பசை ஆகிய பொருட்கள் மற்றும் சமையல் செய்வதற்கான எவர்சில்வர் பாத்திரங்கள் ஆகியவற்றை - நாற்பதாயிரம் குடும்பங்களுக்கு வழங்குவதற்கேற்ற வகையில் தனித்தனியே சிப்பங்களாக தயார் செய்து விரைவில் அனுப்பப்படவுள்ளன.
இந்தப் பொருட்கள் இந்திய அரசின் அனுமதியுடன் இலங்கையிலே உள்ள இந்தியத் தூதரகத்திற்கு அனுப்பப்பட்டு, முறையாக பாதிக்கப்பட்ட தமிழ்க் குடும்பங்களுக்கு விநியோகிக்கப்படும்.
அந்தக் குடும்பங்களுக்கு வழங்கப்படவுள்ள சமையல் பாத்திரங்களை முதல்-அமைச்சர் கருணாநிதி 14.3.2009 அன்று பார்வையிட்டு தேர்வு செய்தார் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.