மக்களவை தொகுதி அறிமுகம்-26: கடலூர்
முன்பு உளுந்தூர்ப்பேட்டை (தனி), நெல்லிக்குப்பம், கடலூர், பண்ருட்டி, ரிஷிவந்தியம், சங்கராபுரம் ஆகியவை இருந்தன.
ஆனால் தற்போது திட்டக்குடி (தனி), விருத்தாச்சலம், நெய்வேலி, பண்ருட்டி, கடலூர், குறிஞ்சிப்பாடி ஆகிய தொகுதிகள் உள்ளன. பழைய தொகுதிகளில் நான்கு இப்போது மாறி விட்டது.
நெய்வேலி, திட்டக்குடி ஆகியவை புதிதாக உருவாக்கப்பட்ட தொகுதிகள் ஆகும்.
கடலூர் தொகுதியை காங்கிரஸ் கோட்டை என்று கூறலாம். இங்கு முதன் முதலில் 1951ம் ஆண்டு தேர்தல் நடந்தது. அன்று முதல் 2004 வரை நடந்துள்ள 14 தேர்தல்களில் 7 முறை காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது.
அதிமுகவுக்கு இங்கு ஒரே ஒரு முறை மட்டுமே வெற்றி கிடைத்துள்ளது. திமுகவுக்கு நான்கு முறை வெற்றிக் கனி கிடைத்தது.
சட்டசபைத் தொகுதிகளைப் பொறுத்தமட்டில் (பழைய மற்றும் புதிய) உளுந்தூர்ப்பேட்டையில் திமுகவின் திருநாவுக்கரசும், நெல்லிக்குப்பத்தில் திமுகவின் சபா. ராஜேந்திரனும், கடலூரில் திமுகவின் ஐயப்பனும், பண்ருட்டியில் பாமகவின் வேல்முருகனும், ரிஷிவந்தியத்தில் காங்கிரஸின் சிவராஜும், சங்கராபுரத்தில் திமுகவின் அங்கயற்கண்ணியும், விருத்தாச்சலத்தில் தேமுதிகவின் விஜயகாந்த்தும், குறிஞ்சிப்பாடியில் திமுகவின் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வமும் உறுப்பினர்களாக உள்ளனர்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த், அமைச்சர் பன்னீர் செல்வம், பாமகவின் இளம் தலைவர்களில் ஒருவரான வேல்முருகன் ஆகியோரின் தொகுதிகளை உள்ளடக்கிய விஐபி தொகுதியாக விளங்குகிறது கடலூர்.
கடந்த தேர்தல் நிலவரம்
2004ம் ஆண்டு நடந்த தேர்தலில் திமுகவின் கே.வெங்கடபதி, அதிமுக சார்பில் போட்டியிட்ட ராஜேந்திரனை தோற்கடித்தார். வெங்கடபதி தற்போது மத்தி சட்டத்துறை இணை அமைச்சராக பொறுப்பு வகிக்கிறார்.
இந்த முறை கடலூர், வெங்கடபதிக்குக் கிடைக்காது என்ற பேச்சு பலமாகவே உள்ளது.
முன்பு எம்.பி.ஆக இருந்தவர்கள்
1951 - ராதாகிருஷ்ணன் (காங்கிரஸ்)
1957 - முத்துக்குமாரசாமி நாயுடு (சுயேச்சை)
1962 - ராமபத்ர நாயுடு (திமுக)
1967 - வி.கே.கவுண்டர் (திமுக)
1971 - ராதாகிருஷ்ணன் (காங்கிரஸ்)
1977 - பூவராகன் (காங்கிரஸ்)
1980 - முத்துக்குமரன் (காங்கிரஸ்)
1984 - பி.ஆர்.எஸ். வெங்கடேசன் (காங்கிரஸ்)
1989 - பி.ஆர்.எஸ். வெங்கடேசன் (காங்கிரஸ்)
1991 - கலியபெருமாள் (காங்கிரஸ்)
1996 - பி.ஆர்.எஸ். வெங்கடேசன் (தமாகா)
1998 - எம்.சி. தாமோதரன் (அதிமுக)
1999 - ஆதி சங்கர் (திமுக)
2004 - கே. வெங்கடபதி (திமுக)
முதல் தேர்தல்
நடந்த ஆண்டு - 1951.
வென்றவர் - ராதாகிருஷ்ணன் (காங்கிரஸ்)