திமுகவிடம் 8+1 தொகுதிகள் கேட்கும் பாமக
சென்னை: மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் இணைய முன் வந்துள்ள பாமக 8 இடங்களையும், ஒரு ராஜ்யசபா எம்பி சீட்டையும் கேட்டுள்ளது.
காங்கிரசுடனும் அதிமுகவுடனும் மட்டும் மறைமுகமாகப் பேச்சுவார்த்தை நடத்தி வந்த பாமக யாருடன் கூட்டணி என்பதை அறிவி்க்கவில்லை. இந் நிலையில் திமுக தேர்தல் குழுத் தலைவரான அமைச்சர் ஸ்டாலினை பாமக தலைவர் ஜி.கே.மணி சந்தித்துப் பேசினார்.
அப்போது பாமகவுக்கு 8 தொகுதிகளையும், ஒரு ராஜ்யசபா எம்பி சீட்டையும் ஒதுக்க வேண்டும் என மணி கோரிக்கை வைத்ததாகத் தெரிகிறது.
ஆனால், கடந்த தேர்தலில் ஒதுக்கப்பட்டதைப் போலவே 6 தொகுதிகளும் ஒரு ராஜ்யசா சீட்டும் தருவதாக திமுக கூறியுள்ளது.
இதை பாமக தரப்பு ஏற்க மறுத்துள்ளது. இதையடுத்து முதலில் கூட்டணியில் சேருங்கள், தொகுதிப் பங்கீடு குறித்து பின்னர் பேசலாம் என பாமகவிடம் திமுக கூறிவிட்டது.
கடந்த முறை திமுக ஒதுக்கிய ராஜ்யசபா சீட்டில் தான் டாக்டர் அன்புமணி எம்பியாகி மத்திய அமைச்சராகத் தொடர்ந்தார் அவரது ராஜ்யசபா பதவிக்காலம் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் 29ம் தேதி முடிவடைவது குறிப்பிடத்தக்கது.
இந் நிலையில் பாமகவுடன் இன்று டெல்லியில் காங்கிரஸ் தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாகத் தெரிகிறது. இதற்காக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் தங்கபாலு, மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், தமிழ்நாடு சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் டி.சுதர்சனம் ஆகியோர் இன்று காலை டெல்லி புறப்பட்டு சென்றனர்.
டெல்லியில் நடக்கும் பேச்சுவார்த்தையில் அன்புமணி மற்றும் பாமக பிரதிநிதிகள் பங்கேற்பார்கள் என்று தெரிகிறது.
டெல்லியில் இந்த காங்கிரஸ் தலைவர்களுடன் தேமுதிகவின் முக்கிய தலைவர் ஒருவரும் (பண்ருட்டி ராமச்சந்திரன்?) பேச்சு நடத்தவுள்ளார்.