25ம் தேதி எஸ்எஸ்எல்சி தேர்வுகள் ஆரம்பம்
சென்னை: எஸ்எஸ்எல்சி தேர்வு வரும் 25ம் தேதி துவங்குகிறது.
இது குறித்து அரசு தேர்வுகள் இயக்கம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,
பத்தாம் வகுப்பு தேர்வு வரும் 25ம் தேதி துவங்கி அடுத்த மாதம் 8ம் தேதி வரை நடைபெறும். இதில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியை சேர்ந்த 6,541 பள்ளிகளிலும் பயிலும் 8 லட்சத்து 42 ஆயிரத்து 350 பேர் தேர்வு எழுதுகிறார்கள். இவர்களில் 4 லட்சத்து 16 ஆயிரத்து 512 மாணவர்களும் மற்றும் 4 லட்சத்து 25 ஆயிரத்து 838 மாணவிகளும் அடங்குவர்.
கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 29 ஆயிரத்து 209 மாணவர்களும், 29 ஆயிரத்து 916 மாணவிகளும் கூடுதலாக தேர்வு எழுதுகிறார்கள். இந்த ஆண்டு தேர்வு எழுதவிருக்கும் தனித்தேர்வர்களின் எண்ணிக்கை 50 ஆயிரத்திற்கும் அதிகம்.
இந்த ஆண்டு முதல் கணிதம், அறிவியல், சமூக அறிவியல் ஆகிய மூன்று பாடங்களுக்கான வினாத்தாள் தமிழ் மற்றும் ஆங்கில என இரு மொழிகளில் அச்சிடப்பட்டுள்ளன. முதலில் தமிழிலும் அதை தொடர்ந்து ஆங்கிலத்திலும் கேள்விகள் கேட்கப்பட்டிருக்கும்.
பத்தாம் வகுப்பு தேர்வை சென்னையில் 37 ஆயிரம் பேர் எழுத உள்ளனர். இவர்களில் 18 ஆயிரத்து 82 பேர் மாணவர்கள். 19 ஆயிரத்து 697 பேர் மாணவிகள். புதுச்சேரியில் 7 ஆயிரத்து 522 மாணவர்களும், 7 ஆயிரத்து 811 மாணவிகளும் ஆக மொத்தம் 15 ஆயிரத்து 333 பேர் தேர்வு எழுதுகிறார்கள்.
நாளை முதல் மெட்ரிக் தேர்வு...
மெட்ரிக்குலேஷன் மற்றும் ஆங்கிலோ-இந்தியன் பள்ளிகளுக்கான பத்தாம் வகுப்பு தேர்வு நாளை 18ம் தேதி தொடங்கி ஏப்ரல் 8-ந் தேதி வரை நடைபெறுகிறது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 3 ஆயிரத்து 128 பள்ளிகளில் இருந்து ஒரு லட்சத்து 16 ஆயிரத்து 787 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதுகிறார்கள். இவர்களில் மாணவர்கள் 64 ஆயிரத்து 734 பேர். மாணவிகள் 52 ஆயிரத்து 53 பேர்.
ஆங்கிலோ-இந்தியன் தேர்வை 4 ஆயிரத்து 697 பேர் எழுதுகிறார்கள். ஓஎஸ்எல்சி தேர்வு எழுதும் மாணவ-மாணவிகளின் எண்ணிக்கை ஆயிரத்து 361 ஆகும். தேர்வு மையங்களில் மெட்ரிக், ஆங்கிலோ-இந்தியன், ஓஎஸ்எல்சி மாணவர்கள் கலந்து அமர்ந்து தேர்வு எழுதுவார்கள். மொத்தம் 2 ஆயிரத்து 788 மையங்களில் தேர்வு நடக்கிறது.
அங்கீகாரம் ரத்து...
வழக்கம் போல் மாவட்ட கல்வி அதிகாரிகள் தலைமையில் பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது. தேர்வு மையங்களில் ஒழுங்கீன செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். ஒழுங்கீன செயல்களுக்கு உடந்தையாகவோ, ஊக்குவிக்கவோ பள்ளி நிர்வாகம் முயன்றால் பள்ளி தேர்வு மையத்தை ரத்து செய்யவும், அங்கீகாரத்தை ரத்து செய்யவும் பரிந்துரை செய்து கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கூறப்பட்டுள்ளது.