பிரபாகரனை அழிக்க நினைத்தால் கடும் விளைவு-வைகோ
இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் இலங்கையில் போர் நிறுத்தம் கோரி புதுவை சிங்கார வேலர் சிலை அருகில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் தலைமை தாங்கிய இக் கூட்டத்தில் பாமக தலைவர் ஜி.கே.மணி கலந்து கொண்டார்.
இதில் வைகோ பேசுகையில்,
இலங்கை தமிழ் மக்களின் தலைவராக பிரபாகரன் போன்று யாரும் தோன்ற முடியாது. விடுதலைப் புலிகளுக்கு நிகர் உலகத்தில் யாரும் இல்லை. பிரபாகரனை அழிக்க நினைத்தால் அதன் விளைவுகள் பயங்கரமாக இருக்கும். விடுதலைப் புலிகள் மட்டுமே தமிழ் மக்களுக்கு அரணாக இருப்பார்கள்.
இலங்கையில் போர் நிறுத்தம் செய்ய மத்திய அரசு ஏன் கூறவில்லை? தமிழக சட்டசபை தீர்மானம் என்ன ஆனது? தமிழன் என்ற முகவரியை உலகத்திற்கு தந்தவர் பிரபாகரன்தான். தேசிய பாதுகாப்பு சட்டத்தை காட்டி எங்களை யாரும் மிரட்ட முடியாது என்றார்
ஜி.கே.மணி பேசுகையில், தமிழ் இனத்தை அழிக்க நினைப்பவர்கள் வாழ்ந்ததாக சரித்திரம் கிடையாது. வட இந்தியர்களுக்கு பாதிப்பு என்றால் மத்திய அரசு சும்மா இருக்குமா?. இலங்கையில் போர் நிறுத்தம் வரவில்லை என்றால் தமிழ் இளைஞர்கள் தாங்கி கொள்ள மாட்டார்கள் என்றார்.
பழ.நெடுமாறன் பேசுகையில், காங்கிரஸ் தலைவர்களின் பேச்சு தமிழ் மக்களின் நெஞ்சை புண்ணாக்குவதாக உள்ளது. தேர்தலை பற்றி நாங்கள் கவலைப்படவில்லை. உயிர் தியாகத்தை மதிக்காதவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு பாடம் புகட்ட தவறக்கூடாது என்றார்.
இக் கூட்டத்தில் தீக்குளித்து இறந்த கடலூரை சேர்ந்த வாலிபர் தமிழ்வேந்தன் குடும்பத்திற்கு ரூ. 3 லட்சம் நிதி அளிக்கப்பட்டது.