30-5-3 - ஜாதகம்: ஜெ.வின் வேட்பாளர் தேர்வு பார்முலா!
அத்தனை கட்சிகளும் இப்போதுதான் விருப்ப மனுக்களை கட்சியினரிடமிருந்து பெற்று வருகின்றன. ஆனால் முதல் ஆளாக ஜெயலலிதா கட்சியினரிடமிருந்து விருப்ப மனுக்களைப் பெற்று விட்டார்.
தற்போது கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு குறித்துப் பேசி வருகிறது அதிமுக. விரைவில் வேட்பாளர் தேர்வை அதிமுக நடத்தவுள்ளது.
இதற்காக ஒரு பார்முலாவை வகுத்துள்ளாராம் ஜெயலலிதா.
லோக்சபா தேர்தலி்ல போட்டியிடுவதற்காக 3500 பேர் வரை அதிமுகவில் விருப்ப மனுக்களைக் கொடுத்துள்ளனர். கடந்த முறை அனைத்து லோக்சபா தொகுதிகளிலும் அதிமுக தோல்வியுற்றது. எனவே இந்த முறை வேட்பாளர் தேர்வில் ஜெயலலிதா தீவிர கவனம் செலுத்துகிறார்.
3 கட்டங்களாக வேட்பாளர் தேர்வை அவர் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. செலவு செய்ய வழியில்லாதவர்கள் முதல் சுற்றிலேயே நாக் அவுட் ஆகி விடுவார்கள். அடுத்த சுற்றில் கல்வித் தகுதி, கட்சி மீதான அவர்களின் விசுவாசம் குறித்து பரிசீலிக்கப்படும். அதிலும் தேறி வருவோரின் ஜாகத்ததைப் பார்த்து அதில் நட்சத்திரம் சிறப்பாக இருப்போர் மட்டுமே வேட்பாளராகும் அதிர்ஷ்டம் கை கூடுமாம்.
அந்த வகையில் ஒவ்வொரு தொகுதிக்கும் 30 பேரைத் தேர்வு செய்து, அவர்களில் 15 பேரை மட்டும் நேர்காணலுக்கு அழைப்பார் ஜெயலலிதா. பின்னர் அதிலிருந்து 3 பேர் இறுதிக் கட்டத்திற்கு தகுதி பெறுவார்கள்.
இவர்களின் ஜாதகத்தைப் பார்த்து, நட்சத்திரம் யாருக்கு நன்றாக உள்ளதோ அவரே வேட்பாளராக அறிவிக்கப்படுவாராம்.
இன்னும் ஓரிரு நாட்களில் இந்த வேலையில் ஜெயலலிதா இறங்குவார் எனத் தெரிகிறது.
அடுத்த 15 நாட்களில் வேட்பாளர் தேர்வை ஜெயலலிதா முடித்து விடுவார் எனத் தெரிகிறது. ஏப்ரல் முதல் வாரத்தில் வேட்பாளர் பட்டியலை அறிவித்து விட்டு தேர்தல் பிரசாரத்திலும் குதிப்பார் ஜெயலலிதா என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த முறையும் பட்டி தொட்டியெங்கும் தீவிரப் பிரசாரத்தில் ஈடுபடவுள்ளார் ஜெயலலிதா. அனைத்துப் பகுதிகளையும் கவர் செய்யும் வகையில் பிரசாரத் திட்டம் வகுக்கப்பட்டு வருகிறதாம்.
திமுக ஆட்சியின் வேதனைகள், இலங்கைப் பிரச்சினை உள்பட அனைத்து முக்கியப் பிரச்சினைகளையும் தனது பிரசாரத்தின்போது ஜெயலலிதா எடுத்துரைப்பார் எனத் தெரிகிறது.