பத்திரிக்கையாளர்களுக்கு தேர்தல் ஆணையம் கட்டுப்பாடு
நெல்லை: நாடாளுமன்ற தேர்தலை முன்னி்ட்டு தேர்தல் ஆணையம் பத்திரிகையாளர்களுக்கு சில புதிய கட்டுப்பாடுகளை வரையறுத்துள்ளது.
தமிழகத்தில் லோக்சபா தேர்தல் வரும் மே மாதம் 15ம் தேதி நடக்கிறது. இந்த தேர்தலை அமைதியாகவும், சுமுகமாகவும் நடத்தும் வகையில் தேர்தல் ஆணையம் மூலம் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தேர்தல் நடத்தை விதிமுறைகள் மீறப்பட்டு வருகிறதா என தொடர்ந்து அனைத்து தொகுதிகளிலும் தேர்தல் ஆணையம் கண்காணித்து வருகிறது.
இந்நிலையில் இந்த தேர்தலில் செய்தி சேகரிக்க செல்லும் பத்திரிக்கையாளர்களுக்கு கடும் கட்டுபாடுகளை தேர்தல் ஆணையம் விதித்துள்ளது. இது தொடர்பாக தேர்தல் ஆணைய அதிகாரி ஒருவர் கூறுகையில்,
ஒவ்வொரு நாடாளுமன்ற தொகுதி ஓட்டுபதிவு மற்றும் ஓட்டு எண்ணிக்கைக்கு ஒரு நிருபர் அல்லது ஒரு போட்டோகிராபர் மட்டுமே அனுமதி வழங்கப்படும். இதனை அந்தந்த பத்திரிக்கை நிறுவனங்களே முடிவு செய்து கொள்ள வேண்டும்.
அந்த நிருபர் அல்லது போட்டோகிராபரின பெயர், முகவரி, தந்தையின் பெயர், விலாசம், வீட்டு போன் நம்பர், செல்போன் நம்பர், பிறந்த தேதி ஆகியவற்றை தேர்தல் கமிஷனுக்கு தெளிவாக தெரிவிக்க வேண்டும். மேலும் அவரது கையெழுத்தையும் சமர்பிக்க வேண்டும். ஐந்து ஸ்டாம்ப் சைஸ் போட்டோக்களையும் அளிக்க வேண்டும்.
இதை அவர்கள் அந்தந்த மாவட்ட மக்கள் தொடர்பு துறை அலுவலகங்களில் கொடுக்க வேண்டும். அவர்களிடம் இருந்து தேர்தல் ஆணையம் பெற்று கொள்ளும். இந்த பட்டியலை தனியாக தெளிவாக கம்யூட்டரி்ல் பதிவு செய்து தேர்தல் கமிஷனுக்கு பேக்ஸ் செய்ய வேண்டும் என அறிவுரை வழங்கப்பட்டது. நேற்று முன்தினம் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டு நேற்று மாலை 6 மணிக்குள் பேக்ஸ் அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.
இதனையடுத்து நேற்று அனைத்து மாவட்ட மக்கள் தொடர்பு துறை அலுவலர்கள் மூலம் இந்த பட்டியல் பெறப்பட்டு தேர்தல் கமிஷனுக்கு அனுப்பும் பணி சுறுசுறுப்பாக நடந்தது. இந்த பணியின் காரணமாக நேற்று மக்கள் தொடர்பு துறை அலுவலங்கள் களை கட்டியதை காண முடிந்தது.
உள்ளூர் டிவிகளுக்கு அனுமதியில்லை...
டிவி மீடியாக்களுக்கு இருவருக்கு அனுமதி வழங்கப்படும். இவர்களின் முழு விவரங்கலையும் தேர்தல் கமிஷனுக்கு தெரிவிக்க வேண்டும். உள்ளூர் கேபிள் டிவி சேனல்களுக்கு எந்தவித அனுமதியும் வழங்கப்பட மாட்டாது என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
வழக்கமாக ஒவ்வொரு தேர்தலுக்கு ஓட்டுபதிவு மற்றும் ஓட்டு எண்ணிக்கைக்கு பெரிய அளவிலான ஓரே அட்டையில் இருபுறமும் வேவ்வேறு கலர்களில் அனுமதி வழங்கப்படும். ஆனால் இந்த தேர்தலில் நடைமுறை மாற்றப்பட்டு சிறிய அளவிலான அடையாள அட்டை வழங்கப்பட உள்ளது.
மேலும் ஓட்டு பதிவுக்கு தனியாகவும், ஓட்டு எண்ணிக்கைக்கு தனியாகவும் அடையாள அட்டை வழங்கப்படலாம் என்றார் அவர்.