கோர்ட் வளாகம் வரை சாமிக்கு பாதுகாப்பு!
அதேசமயம், கோர்ட் ஹாலுக்குள் பாதுகாவலர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் எனவும் அவர் கூறியுள்ளார்.
மதுரையில் ஜனதா கட்சி அலுவலகம் தாக்கப்பட்டதை அடுத்து அக்கட்சி தலைவர் சுப்பிரமணியம்சாமி சென்னை உயர்நீதி மன்றத்தில் மனு செய்தார்.
தற்போது சென்னை உயர்நீதிமன்றத்திற்குள் வருவதற்கான உசிதமான சூழ்நிலை சாமிக்கு இல்லை என்பதால், அந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் மதுரையில் உள்ள கிளைக்கு மாற்றி உத்தரவிட்டது.
இதற்கான விசாரணை வரும் ஏப்ரல் மாதம் 28ம் தேதி நடக்கிறது.
இந்நிலையில் சுப்பிரமணியம் சாமி, மதுரை உயர்நீதிமன்ற கிளையின் பதிவாளர் அமீர்ஜானுக்கு மனு ஒன்றை அனுப்பினார்.
அதில் வழக்கு விசாரணையின் போது பாதுகாப்பு படையினருடன் நீதிமன்ற வளாகம் வரை வரலாம் என சென்னை உயர்நீதி மன்ற தலைமை நீதிபதி எனக்கு அனுமதி தந்துள்ளார். இங்கேயும் அதற்கு அனுமதி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
இந்த மனுவை ஆராய்ந்த பின் அமீர்ஜான் அனுப்பிய பதிலில், வழக்கு விசாரணைக்கு வரும்போது நீதிமன்ற வளாகம் வரை பாதுகாப்பு படையினருடன் வரலாம். ஆனால், நீதிமன்றத்துக்குள் அவர்கள் நுழைய கூடாது. வழக்கு முடியும் வரை அவர்கள் வெளியில் காத்திருக்க வேண்டும் என்றார்.
எனவே வளாகம் வரை பாதுகாப்புடன் சாமி வரலாம். ஆனால் உள்ளே அவருக்குப் பாதுகாப்பு கிடையாது. சென்னை உயர்நீதிமன்றத்தில் கூட, கோர்ட் ஹாலுக்குள் வைத்துத்தான் சாமியை வக்கீல்கள் சரமாரியாக தாக்கினர் என்பது நினைவிருக்கலாம்.