இந்தியாவில் பணவீக்கமே இல்லையாம்!
கடந்த வாரம் 2.42 சதவிகிதமாக இருந்த பணவீக்கம், மார்ச் 7-ம் தேதியோடு முடிவடையும் வாரத்தில் 0.44 புள்ளியாகக் குறைந்துள்ளது என இந்திய நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது.
இந்திய பொருளாதார சரித்திரம் காணாத வீழ்ச்சி இது என பொருளியல் வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். மொத்த விலைக் குறியீட்டெண்படி, இந்த நிதி ஆண்டின் பணவீ்க்க விகிதம் 2.42 சதவிகிதம் மட்டுமே. இதுவே கடந்த ஆண்டு 7.78 சதவிகிதமாக இருந்ததாம்.
கடந்த 1 வார காலத்தில் மட்டும் உணவுப் பொருள்களின் விலை 7.34 சதவிகிதம் குறைந்துள்ளதாம். இந்திய சரித்திரம் காணாத அளவுக்கு உணவுப் பொருள்களின் விலைகள் குறைந்து படு பாதாளத்துக்குப் போய் விட்டதாக இந்திய அரசு இன்று அறிவித்துள்ளது.
விமான எரிபொருள் மற்றும் விவசாயத்துக்கு வழங்கப்படும் மின்சாரம் ஆகியவற்றின் விலையில் 8 சதவிகிதம் குறைந்துள்ளதாம்.
பெட்ரோலியப் பொருள்களின் விலை மிகமிகக் குறைந்திருப்பதாகவும், விரைவிலேயே அது எதிர்மறை நிலையை அடையும் வாய்ப்பிருப்பதாகவும் இந்த வாராந்திர பணவீக்க அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரும் மாதங்களில் மக்களின் வாங்கும் சக்தி இன்னும் குறையும் என்றும், இதனால் பணவீக்கம் மைனசுக்கு மாறிவிடும் என்றும், இந்த நிலையைத் தவிர்க்க, மத்திய ரிசர்வ் வங்கி மேலும் பணப்புழக்கத்தை அதிகரிக்க வேண்டும் என்றும் பொருளியல் நிபுணர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அதே நேரம், ஜனவரி மாத நுகர்வோர் விலைக் குறியீட்டெண் கணக்குப்படி நாட்டில் 10.45 சதவிகிதமாக உள்ளது.
சரி.. மொத்த விலைக் குறியீட்டெண் கணக்குப்படி நாட்டில் பணவீக்கமே இல்லையே... நுகர்வோருக்கான விலைகள் குறையுமா?
"ம்ஹூம்... வாய்ப்பே இல்லை", என்கிறார் பிரபல பொருளாதார நிபுணர் துஷார் போத்தர்.
இந்தியப் பொருளாதார கணக்கீடுகள் வாடிக்கையாளர்கள், மக்களுக்கு சாதகமானவை அல்ல. தொழிலதிபர்களுக்கு சாதகமானவை. அதாவது, இந்தியாவில் விலைகளைக் கட்டுப்படுத்தும் அதிகாரம் அரசுக்குக் கிடையாது... அல்லது அரசின் கட்டுப்பாட்டில் இல்லை.
இந்த உண்மை புரியாததால்தான் ஒவ்வொரு முறை பணவீக்கம் குறையும் போதும், விலை ஏன் குறையவில்லை என்ற கேள்வி எழுகிறது.
தொழிலதிபர்கள், வியாபாரிகள், வங்கிகள் மனது வைத்தால் நுகர்வோர் விலைக் குறியீட்டெண் சாதகமாக மாறலாம் என்கிறார் போத்தர்.