ஜார்க்கண்டில் லாலுவுக்கு 2 சீட் ஒதுக்கி காங் பதிலடி
டெல்லி: பீகாரில் தங்களுக்கு 3 தொகுதிகள் மட்டுமே ஒதுக்கி லாலுவின் ராஷ்டீரிய ஜனதா தள கட்சிக்கு காங்கிரஸ் ஜார்க்கண்டில் 2 தொகுதிகள் ஒதுக்கி பதிலடி கொடுத்துள்ளது.
சமீபத்தில் பீகாரில் உள்ள 40 நாடாளுமன்ற இடங்களுக்கான தொகுதி பங்கீட்டை ராஷ்டீரிய ஜனதா தள தலைவர் லாலு அறிவித்தார். அதில் தங்கள் கட்சி 25, பஸ்வான் கட்சி 12 மற்றும் காங்கிரஸ் 3 தொகுதிகளில் போட்டியிடும் என அறிவித்தார். தேசிய கட்சியான தங்களுக்கு 3 தொகுதிகள் மட்டுமே ஒதுக்கப்பட்டது காங்கிரசுக்கு பெரும் அதிர்ச்சியாக அமைத்தது.
இதையடுத்து காங்கிரஸ் கட்சி ஜார்க்கண்ட் மூலம் லாலுவுக்கு பதிலடி கொடுக்க திட்டமிட்டது. இதையடுத்து இங்கு சிபு சோரனின் ஜார்க்கண்ட் முக்திமோர்ச்சாவுடன் கூட்டணி உடன்பாட்டை முடிவு செய்துள்ளது. இங்கு லாலுவும் இவர்கள் கூட்டணியில் இருந்த போதும் அவரிடம் கலந்து ஆலோசிக்கவில்லை.
ஜார்க்கண்ட்டில் மொத்தமுள்ள 14 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி 7, ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா 5 இடங்களிலும் போட்டியிடும் என்றும், எஞ்சிய 2 தொகுதிகள் லாலு பிரசாத் கட்சிக்கு கொடுக்கப்பட்டுள்ளதாக பீகார் மாநில் காங்கிரஸ் கட்சி தலைவர் கேசவ் ராவ் தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்பு நடந்த பேச்சுவார்த்தையில் காங்கிரசுக்கு 6, லாலு கட்சிக்கு 3 என பேசப்பட்டிருந்தது. ஆனால் தற்போது காங்கிரஸ் தங்களுக்கு ஒன்றை அதிகரித்து, லாலுவுக்கு ஒன்றை குறைத்துள்ளது. ஆனால், இந்த தொகுதி உடன்பாட்டை லாலு ஏற்றுக்கொள்வாரா என்பது தெரியவில்லை.