காங்.க்கு 1 தொகுதி கூட கிடைக்காது-விஜயசாந்தி
ஹைதராபாத்தில் நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டி:
தெலுங்கானா தனி மாநிலம் அமைக்க வேண்டும் என நான் பல ஆண்டுகளாக போராடி வருகிறேன். இதற்காகதான் நான் தல்லி தெலுங்கானா என்ற கட்சியை தொடங்கினேன். தெலுங்கான மாநிலம் என்ற ஒரே பிரச்சினைக்காக தனித்தனியாக பிரிந்திருந்து குரல் கொடுப்பது நல்லதல்ல என்பதை கருத்தில் கொண்டு தெலுங்கானா ராஷ்டீரிய சமிதியில் இணைந்தேன்.
காங்கிரசார் பணம், பதவி வெறிபிடித்தவர்கள்...
கடந்த தேர்தலின் போது தெலுங்கானா தனி மாநிலம் அமைப்போம் என்று காங்கிரஸ் கட்சி உறுதி அளித்தது. ஆனால் ஆட்சிக்கு வந்ததும் அதை மறுத்துவிட்டது.
காங்கிரசார் பணம், பதவி வெறிபிடித்தவர்கள். ஆந்திர மக்களுக்காக நாடாளுமன்றத்தில் ஒரு போதும் குரல் கொடுக்க மாட்டார்கள். காங்கிரஸ் மேலிடத்தின் அடிமைகளாகத்தான் இருப்பார்கள். தங்கள் மாநில மக்கள் வறுமையில் வாடினாலும், இன்னலுக்கு ஆளானாலும் கண்டு கொள்ள மாட்டார்கள். காங்கிரஸ் மேலிடம் என்ன சொல்கிறதோ அதை மட்டும்தான் அக்கட்சி எம்.பி.க்களால் செய்ய முடியும்.
பச்சை துரோகி காங்கிரசுக்கு பாடம் புகட்ட வேண்டும்...
இதனால் இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சியை தோற்கடித்தே தீருவோம். இதற்காக நான் மாநிலம் முழுவதும் சென்று தீவிர பிரசாரம் செய்வேன். காங்கிரஸ் ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்துவிட்டது. அனைத்து துறைகளிலும் ஊழல் அதிகரித்துவிட்டது.
எனவே இந்த தேர்தலில் ஆந்திராவில் காங்கிரசுக்கு ஒரு இடம் கூட கிடைக்க கூடாது என்பதில் நாங்கள் மிக கவனமாக இருக்கிறோம். மக்களும் இதை மெல்ல மெல்ல புரிந்து வருகிறார்கள். தெலுங்கானாவுக்கு பச்சைத்துரோகம் செய்த காங்கிரசுக்கு தெலுங்கானா மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள்.
மத்தியில் காங். அல்லாத அரசு...
என்னைப்பொறுத்த வரையில் எப்போதுமே பதவிக்கு ஆசைப்பட்ட தில்லை. அப்படி ஆசைப்பட்டிருந்தால் நான் பாஜகவிலே இருந்திருப்பேன்.
தெலுங்கானா தனி மாநிலத்திற்கு குரல் கொடுக்கத்தான் நான் பாஜகவில் இருந்து விலகி தனிக்கட்சி தொடங்கினேன். இந்த முறை மத்தியில் காங்கிரஸ் அல்லாத அரசு அமைய எங்கள் கூட்டணி பாடுபடும் என்றார் விஜயசாந்தி.