புலிகள் தற்கொலை தாக்குதல் நடத்தலாம்-இலங்கை
கொழும்பு: இலங்கையின் தென் பகுதியில் விடுதலைப் புலிகள் தற்கொலைப் படைத் தாக்குதல்களை நடத்தலாம். எனவே ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என சிங்களர்களை இலங்கை அரசு பீதிக்குள்ளாக்கி வருகிறது.
இதுகுறித்து இலங்கை காவல்துறை செய்தித் தொடர்பாளர் ரஞ்சித் குணசேகராவை மேற்கோள் காட்டி இலங்கை தேசிய பாதுகாப்புக்கான மீடியா மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தென் பகுதியில் பேரழிவுகளை ஏற்படுத்த விடுதலைப் புலிகள் திட்டமிட்டிருப்பதாக செய்திகள் வந்துள்ளன.
கொழும்பு உள்பட இலங்கையின் மேற்கு மற்றும் தென் மாகாணங்களில் தற்கொலைப் படைத் தாக்குதல்களை விடுதலைப் புலிகள் நடத்தக் கூடும் என செய்திகள் வந்துள்ளன. எனவே வார இறுதி நாட்களில் இப்பகுதிகளில் தீவிர சோதனைகள் நடைபெறும்.
இலங்கையின் தெற்கில் உள்ள மாத்தரா மாவட்டத்தில் கடந்த 9 நாட்களில் 14 பேர் தற்கொலைப் படைத் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளனர் என்று அது கூறுகிறது.
99 சதவீத வெற்றி-ரம்புகெவல்லா:
இதற்கிடையே, புலிகளுக்கு எதிரான போரில் 99 சதவீத வெற்றியை ராணுவம் அடைந்து விட்டதாக பாதுகாப்புத்துறை செய்தித் தொடர்பாளரும், அமைச்சருமான கெகலிய ரம்புகவெல்லா கூறியுள்ளார்.
மேலும், விடுதலைப் புலிகள் பகுதிகளிலிருந்து இதுவரை 45 ஆயிரத்து 519 தமிழர்கள் தப்பி வந்துள்ளதாகவும் கூறுகிறார் ரம்புகவெல்லா.
முல்லைத்தீவு அருகே விடுதலைப் புலிகள் பகுதியிலிருந்து 643 தமிழர்களை கடற்படை மீட்டதாகவும் மீடியா மையம் தெரிவித்துள்ளது.
தற்போது புதுக்குடியிருப்பபு பகுதிசயைச் சுற்றிலும் கடும் சண்டை நடந்து வருவதாக ராணுவம் தெரிவித்துள்ளது.