கூட்டுறவு வங்கியில் ரூ 2.5 லட்சம் கையாடல்
கோபி: கோபி அருகே தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் முறைகேட்டில் ஈடுபட்ட கூட்டுறவு வங்கி செயலாளர் சஸ்பெண்ட் உட்பட மூன்று ஊழியர்கள் சஸ்பென்ட் செய்யப்பட்டனர்.
ஈரோடு மாவட்டம் கோபி அருகே பாரியூர் வெள்ளாளபாளையம் கிராமத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி ஒன்று உள்ளது. இந்த வங்கியில் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் உறுப்பினர்களாக உள்ளனர்.
சமீபத்தில் அரசு அறிவித்த கூட்டுறவு கடன் தள்ளுபடியை அடுத்து வங்கியில் உள்ள உறுப்பினர்கள் 184 பேருக்கு ரூ. 1.19 கோடி தள்ளுபடி செய்யப்பட்டது.
இதில் கடன் வாங்கியிருந்த விவசாயிகள் சிலர் கடன் தொகையில் கொஞ்சத்தை திருப்பி செலுத்தியுள்ளனர். ஆனால், வங்கி ஊழியர்கள் அதை மறைத்து அந்த தொகையும் கடன் தள்ளுபடி செய்யப்பட்டதாக கணக்கு காட்டியுள்ளனர்.
இதையடுத்து விவசாயிகள் வங்கி ஊழியர்கள் மீது புகார் கொடுத்தனர். இந்நிலையில் இது குறித்து விசாரணை நடத்தக் கோரி 100க்கும் மேற்பட்ட விவிசாயிகள் வங்கியை முற்றுகையிட்டனர். இதனால் அங்கு பாதுகாப்புக்கு போலீசார் குவிக்கப்பட்டனர்.
இதை தொடர்ந்து தனி அலுவலர் பெருமாள் தலைமையில் அதிரடி விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
அப்போது கணக்குகளை ஆய்வு செய்த அதிகாரிகள், வங்கியில் கடன் தள்ளுபடி பணத்தில் முறைகேடு நடந்திருப்பதை கண்டுபிடித்தனர். வங்கி செயலாளர் சதாசிவம், எழுத்தர் தேவி, அலுவலக உதவியாளர் மோகன்ராஜ் ரூ. 2.5 லட்சம் கையாடல் செய்திருப்பதை உறுதி செய்தனர். இதனையடுத்து அவர்கள் மூவரும் உடனடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.