கூட்டணியில் திருமாவளவனா?-ஞானசேகரன் கொதிப்பு
வேலூர்: திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ப்பதற்கு காங்கிரஸ் மூத்த எம்எல்ஏ வேலூர் ஞானசேகரன் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
வேலூர் மாவட்ட காங்கிரஸ் செயல் வீரர்கள் கூட்டத்தில் அவர் பேசுகையில்,
திருமாவளவன் கட்சி தொடங்கி தேர்தலையே சந்திக்காமல் இருந்தபோது, ஜி.கே.மூப்பனார் தான் அவரை தேர்தலை சந்திக்க வைத்தார். அப்படிப்பட்ட காங்கிரஸ் கட்சியை வேரோடு அழிப்பேன் என்று கூறி வரும் திருமாவளவன் இக்கூட்டணிக்கு தேவையா?.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை படுகொலை செய்தவர்களுக்கு ஆதரவாகவும், இந்திய இறையாண்மைக்கு எதிராகவும் செயல்பட்டு வரும் திருமாவளவனை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என்று காங்கிரசார் கூறி வரும் நிலையில் அவர் கூட்டணியில் நீடிப்பதாக முதல்வர் அறிவித்திருப்பது வேதனை அளிக்கிறது.
இதன் மூலம் காங்கிரஸ் கட்சியினரை கருணாநிதி அவமானப்படுத்தி விட்டார். இது காங்கிரஸ் தொண்டர்களுக்குக் கிடைத்த மரண அடி.
தொண்டர்களை மதிக்காத எந்த கூட்டணியும் தேர்தலில் வெற்றிபெற முடியாது. காங்கிரஸ் நிர்வாகிகள் தொண்டர்களின் உணர்வுகளை புரிந்து கொள்ள வேண்டும். காங்கிரஸ் நிர்வாகிகள் தலையாட்டி பொம்மைகளாக இருப்பது கட்சிக்கு நல்லதல்ல.
மேலிடம் சொல்லி விட்டது; நாங்கள் என்ன செய்வது என தமிழக காங்கிரஸ் தலைவர்கள் சொன்னால், உங்களுக்கு நீங்களே தூக்கு போட்டுக் கொள்ளும் நிலை ஏற்படும்.
திருமாவளவன் கூட்டணியில் நீடித்தால், ''திருமாவளவனை வெளியேற்று'' என்று இயக்கம் தொடங்க நேரிடும். திருமாவளவனு டன் கூட்டணி வைப்பதை விட தமிழகத்தில் காங்கிரஸ் தனித்து போட்டியிட வேண்டும்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியில் கொள்கைகள் காங்கிரஸ் கட்சிக்கு எதிர் மாறானவை. வளமாக தமிழகம், வலிமையான பாரதம் என்பது காங்கிரஸ் கொள்கை. தனித்தமிழ்நாடு கோஷம் கொண்டவர்கள் விறுதலை சிறுத்தைகள்.
விடுதலைச் சிறுத்தைகள் கொள்கைகள் ஒத்துப் போவதாகக் கருணாநிதி கூறுகிறார். கட்டப் பஞ்சாயத்து செய்பவர்கள், பஸ்களை உடைத்தவர்கள், பாகிஸ்தானை எதிர்த்து இந்தியா போராட முடியுமா என இந்திய இறையாண்மையைக் கேவலப்படுத்தியவர்களின் கொள்கைகள் ஒத்துப் போவதாக கருணாநிதி கூறுவது எந்த விதத்தில் நியாயம்? என்றார் ஞானசேகரன்.
பின்னர் விடுதலைச் சிறுத்தைகளை கூட்டணியில் சேர்க்கக் கூடாது என்று தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.