கோவை மருத்துவக் கல்லூரியில் ராகிங்-டீன் விசாரணை
கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தில் கல்லூரிகளை ஆட்டி படைத்த ராகிங் கொடுமைகளுக்கு சில உயிர்கள் பலியாயின. இதையடுத்து ராக்கிங் கடுமையான சட்டங்கள் மூலம் ஓரளவுக்கு அடக்கப்பட்டது. ஆனால் முற்றிலும் அழிக்கப்படவில்லை.
சமீப காலமாக ராக்கிங் கல்லூரிகளில் மீண்டும் தலை காட்டத் துவங்கியுள்ளது. ஹிமாச்சல பிரதேசத்தில் ஒரு மாணவன் ராகிங் செய்து கொல்லப்பட்டான். ஆந்திராவில் ஒரு மாணவி தற்கொலைக்கு முயற்சி செய்தார்.
இந் நிலையில் கோவை மருத்துவக் கல்லூரியில் ராகிங் நடப்பதாக புகார் கடிதம் ஒன்று வந்துள்ளது. பெயர், முகவரி இன்றி வந்த அக்கடிதத்தை ராகிங்கால் பாதிக்கப்பட்ட மாணவர் ஒருவர் தான் வெளிப்படையாக புகார் அளிக்க பயந்து இப்படி கடிதம் மூலம் தெரிவித்திருக்க வேண்டும் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
அதில், கல்லூரி விடுதியில் இருக்கும் மூத்த மாணவர்கள், ஜூனியர்களை ராகிங் செய்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே போல் மாணவிகள் விடுதியிலும் நடப்பதாகக் கூறப்பட்டுள்ளது.
இந்த கடிதத்தை அனுப்பியது யார் என்பது தெரியாத நிலையிலும் ராகிங் பிரச்சினை என்பதால் கல்லூரி டீன் டாக்டர் குமரன் உடனடியாக விசாரணையை ஆரம்பித்துள்ளார்.
சில குறிப்பிட்ட மூத்த மற்றும் ஜூனியர் மாணவர்களிடம் கல்லூரி நிர்வாகம் தனியறையில் ரகசிய விசாரணை நடத்தினர்.
கல்லூரி டீன் கூறுகையில், முதல் கட்டமாக சில மாணவர்களிடம் விசாரணை செய்துள்ளோம். அடுத்த கட்ட விசாரணை வரும் 25ம் தேதி நடத்தப்படும். அதன் பின்னர் மருத்துவ கல்லூரி இயக்குனரிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்படும்.
ராகிங் நடந்தது உறுதியானால் சம்பந்தபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.