இதுவே என் கடைசி தேர்தல்-பிரணாப் முகர்ஜி
ஜாங்கிபூர்: இந்தத் தேர்தல் தான் என் அரசியல் வாழ்வில் கடைசி தேர்தலாக இருக்கும் என்று வெளியுறவு அமைச்சரும் மூத்த காங்கிரஸ் தலைவருமான பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார்.
தனது அரசியல் வாழ்வில் பெரும் பகுதியை ராஜ்யசபா எம்பி பதவி மூலமாகக் கழித்த பிரணாப் கடந்தமுறை தான் முதன்முறையாக லோக்சபா தேர்தலில் மேற்கு வங்கத்தின் ஜாங்கிபூர் தொகுதியி்ல் போட்டியிட்டு வென்றார்.
இப்போது மீண்டும் அதே தொகுதியில் அவர் போட்டியிடுகிறார். அந்தத் தொகுதியில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய முகர்ஜி, நான் நீண்ட காலமாக அரசுகளில் இருந்து விட்டேன். கடந்த 38 வருடமாக நாடாளுமன்றத்தி்ல் இருந்து விட்டேன்.
மீண்டும் ஒருமுறை உங்களின் ஆதரவைக் கேட்டு வந்துள்ளேன். எனக்கு வயதாகிவிட்டது. இதுவே என் கடைசி தேர்தலாகக் கூட இருக்கலாம். யாருக்குத் தெரியும் என்றார் முகர்ஜி.
அவரது பேச்சு கிட்டத்தட்ட புலம்பல் மாதிரியே இருந்தது.