ஜார்ஜ் பெர்னாண்டசுக்கு 'ஆப்பு' வைத்த சரத் யாதவ்!
இதனால் அதிர்ச்சியடைந்துள்ள பெர்னாண்டஸ் அங்கு அதிருப்தி வேட்பாளராரக் களமிறங்கப் போவதாக அறிவித்துள்ளார்.
பிகாரில் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையில் இந்தக் கட்சி தான் ஆட்சியில் உள்ளது. இந்தக் கூட்டணி அரசில் பாஜகவும் பங்கேற்றுள்ளது.
அங்கு மக்களவைத் தேர்தல் தொகுதிப் பங்கீட்டில் பாஜக-ஐக்கிய ஜனதா தளம் இடையே மோதல் நடந்து வருகிறது. இந் நிலையில் ஐக்கிய ஜனதா தளத்தில் கட்சிக்குள்ளும் மோதல் வெடித்துள்ளது.
பிகாரின் முசாபரபூர் தொகுதியில் இருந்து 5 முறை தேர்வானவர் பெர்னாண்டஸ். இப்போது உடல் நலம் குன்றியுள்ளார். ஆனாலும் தேர்தல் ஆசை போகவில்லை.
இந் நிலையில் உடல் நிலையைக் காரணம் காட்டி அவருக்கு இம் முறை போட்டியிட வாய்ப்பு தரப்படாது என்று கட்சியின் தலைவர் சரத் யாதவ், கூறிவிட்டார். அதே நேரத்தில் பிகாரி்ல் ராஜ்யசபா சீட் காலியாகும்போது உங்களை எம்பியாக்குகிறோம் என்று கூறிவிட்டார்.
இதற்கு பதிலளித்த பெர்னாண்டஸ், எனக்கு ராஜ்யசபா மூலம் பின் வாசல் அரசியல் நடத்த விருப்பமில்லை. நான் நிச்சயம் தேர்தலில் போட்டியிடுவேன். கட்சி சீட் தந்தாலும் சரி தராவிட்டாலும் சரி என்று கூறியுள்ளார்.
மிரட்டி சீட் வாங்கிய சத்ருகன்:
இதற்கிடையே பிகாரின் பாட்னா தொகுதியில் போட்டியிட பாஜக சார்பில் நடிகர் சத்ருகன் சின்காவுக்கு மீண்டும் சீட் வழங்கப்பட்டுள்ளது.
அவருக்கு கட்சியில் இம்முறை சீட் தரப்படாது என்று கூறப்பட்ட நிலையில், கடந்த வாரம் சமாஜ்வாடி கட்சியின் பொதுச் செயலாளர் அமர் சிங்கை சின்ஹா சந்தித்துப் பேசினார்.
இதனால் அவர் சமாஜ்வாடிக்குத் தாவி அந்தக் கட்சியின் சார்பில் போட்டியிடுவாரோ என்று மிரண்டு போன பாஜக மீண்டும் அவருக்கே சீட் வழங்கிவிட்டது.