ஒரே நேரத்தில் எம்பி-எம்எல்ஏ தேர்தலில் சிபு சோரன் போட்டி
ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா மத்தியிலும் மாநிலத்திலும் காங்கிரசுடன் கூட்டணி வைத்துள்ளது. இதன் தலைவரான சிபு சோரன் மத்திய நிலக்கரித்துறை அமைச்சராக இருந்தார்.
ஒரு கொலை வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட பின் மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். மேல் முறையீட்டை தொடர்ந்து அவரது தண்டனை ரத்து செய்யப்பட்டது.
இதையடுத்து மீண்டும் மத்திய அமைச்சர் பதவி கேட்டார். ஆனால், அவருக்கு பதவி தர மறுத்துவிட்டார் சோனியா.
இந் நிலையில் ஜார்க்கண்ட் மாநிலத்தில் தனது கட்சியின் முதல்வரை பதவி விலகச் செய்துவி தானே முதல்வரானார் சிபு. முதல்வராக நீடிக்க அங்கு நடந்த சட்டசபை இடைத்தேர்தலில் போட்டியிட்டார். ஆனால், படுகேவலமாகத் தோற்றார். அத்தோடு முதல்வர் பதவியையும் ராஜினாமா செய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார்.
இந் நிலையி்ல் வரும் மக்களவைத் தேர்தலில் காங்கிரசுடன் கூட்டணி அமைத்து மொத்தமுள்ள 12 தொகுதிகளில் 5 தொகுதிகளில் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சாவும், 7 தொகுதிகளில் காங்கிரசும் போட்டியிடுகின்றன.
இதில் சோரன் தும்கா மக்களவைத் தொகுதியில் போட்டியிடுகிறார். மேலும் மீண்டும் முதல்வராகும் முயற்சியாக ஜமாதாரா சட்டசபைத் தொகுதிக்கு நடக்கும் இடைத் தேர்தலிலும் போட்டியிடுகிறார். பாஜகவிலிருந்து நீக்கப்பட்ட விஷ்ணு பையா என்ற எம்எல்ஏ ராஜினாமா செய்தததால் இங்கு இடைத் தேர்தல் நடக்கிறது.
சட்டசபை இடைத் தேர்தலில் வென்றால் மீண்டும் சிபு முதல்வராகிவிடுவார்.