For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஜெவின் மகத்தான சாதனைகளை மறைப்பதா?-ஓ.பி

By Sridhar L
Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தின் இன்றைய மின்சார உற்பத்தியில் 33 சதவீத நிறுவு திறன் ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் சேர்க்கப்பட்டது என்று அதிமுக பொருளாளர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

அமைச்சர் ஆற்காடு வீராசாமி, தற்போதைய மின்வெட்டிற்கு கழகப் பொதுச் செயலாளரும், முன்னாள் முதல்வரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான ஜெயலலிதாவை குறை கூறியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.

மொத்த மின்சார நிறுவு திறனில், 33 சதவீத நிறுவுதிறன் அதிமுக ஆட்சிக் காலத்தில்தான் சேர்க்கப்பட்டது என்பதை வேண்டுமென்றே மறைத்து அரசியல் ஆதாயம் தேட முயற்சிக்கிறார் வீராசாமி.

2006ம் ஆண்டின் தொடக்கத்தில் தமிழ்நாட்டின் மின் உற்பத்தி நிறுவு திறன் 10,011 மெகாவாட் என்று 2006-2007ம் ஆண்டு திமுக அரசின் நிதிநிலை அறிக்கையிலேயே தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், தற்போதைய மின் நிறுவு திறன் என்ன? மின் உற்பத்தி நிறுவு திறன் குறைந்ததற்கு என்ன காரணம்? என்பதை வீராசாமி நாட்டு மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.

2001 முதல் 2006 வரையிலான அதிமுக ஆட்சிக் காலத்தில் பல்வேறு மின் திட்டங்கள் மூலம் 2,000 மெகாவாட் அளவிற்கு கூடுதல் மின்திறன் சேர்க்கப்பட்டது. இது தவிர, 2,142 மெகாவாட் மின் நிறுவு திறன் கொண்ட காற்றாலைகளும், 275 மெகாவாட் தொழிற்சாலை இணை உற்பத்தியும் சேர்க்கப்பட்டுள்ளது.

அதாவது, இன்றைய மின் கட்டமைப்பின் மொத்த நிறுவு திறனில் 33 சதவீதம் நிறுவு திறன் ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் சேர்க்கப்பட்டது என்பதை ஆற்காடு வீராசாமிக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன்.

அதிமுக ஆட்சி காலத்தில் ஜெயலலிதா செய்த மகத்தான சாதனைகளை எல்லாம் மறைத்து ஆற்காடு வீராசாமி அறிக்கை வெளியிட்டிருப்பது முழுப்பூசணிக்காயை சோற்றில் மறைப்பதற்குச் சமம்.

விலைவாசியை குறைக்க ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசித் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதாக ஆற்காடு வீராசாமி தெரிவித்திருக்கிறார். மின்துறையில் என்ன நடக்கிறது என்பதே தெரியாத ஒரு நிர்வாகத் திறமையற்ற அமைச்சர் விலைவாசி குறித்து பேசுவது நகைப்புக்குரியதாக இருக்கிறது.

1989ம் ஆண்டு உணவுத்துறை அமைச்சராக இருந்த ஆற்காடு வீராசாமி பாதியிலேயே அப்பதவியில் இருந்து தூக்கி எறியப்பட்டவர் என்பதை தமிழக மக்கள் நன்கு அறிவார்கள். மக்கள் கொதித்தெழுகின்ற சூழ்நிலை இருக்கும்போது, பிறவேலைகளில் கவனம் செலுத்தாமல் மின்சாரப் பற்றாக்குறையை போக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுவது அவருக்கு நல்லது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X