திண்டுக்கல் அருகே 2 போலி டாக்டர்கள் கைது
திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே மக்களுக்கு சிகிச்சை அளித்து வந்த இரண்டு போலி டாக்டர்களை போலீசார் கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகே உள்ள முத்துநாயக்கன்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சிவசாமி மகன் சந்திரசேகரன் (52). இவர் சுகாதாரத்துறையில் பணியாற்றிவிட்டு விருப்ப ஓய்வு பெற்றவர்.
இந்த நிலையில் சந்திரசேகரன் ஒட்டன்சத்திரம் பஸ் நிலையம் அருகே கமலா மருத்துவமனை என்ற பெயரில் நோயாளிகளுக்கு ஆங்கில முறையில் சிகிச்சை அளித்து வந்தார்.
அதே போன்று ஒட்டன்சத்திரம் கைராசி நகரைச் சேர்ந்த அருணகிரி (40) என்பவரும் தும்மிச்சம்பட்டி பிரிவு அருகே அண்ணாமலை மருத்துவமனை என்ற பெயரில் நோயாளிகளுக்கு ஆங்கில முறையில் சிகிச்சை அளித்து வந்துள்ளார்.
இது குறித்து தஞ்சை அகில இந்திய மனித உரிமை கண்காணிப்பகத்தை சேர்ந்த அமீர் சைது என்பவர் இடையகோட்டை காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் இடையகோட்டை போலீ்ஸ் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் தீவிர விசாரணை நடத்தினார். அப்போது அவர்கள் இருவரும் போலி டாக்டர்கள் என்று தெரிய வந்தது.
இதனையடுத்து போலி டாக்டர்கள் அருணகிரி, மற்றும் சந்திரசேகரன் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.