அண்ணாச்சி இன்று சரண்-சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு
தனக்கு வழங்கப்பட்ட ஆயுள் தண்டனையை எதிர்த்து அவர் உச்ச நீதிமன்றத்தில் அப்பீல் செய்யவுள்ளார்.
தனது ஹோட்டலில் வேலைபார்த்த ஊழியரின் மகளான ஜீவஜோதியின் கணவர் பிரின்ஸ் சாந்தகுமாரை அடியாட்களை வைத்துக் கடத்திக் கொலை செய்தார் ராஜகோபால்.
இந்த வழக்கில் ராஜகோபால், அவரது மேனேஜர் டேனியல், மற்றும் கார்மேகம், ஜாகீர் உசேன், தமிழ்செல்வன், காசிவிசுவநாதன், பட்டுராஜன், சேது, முருகானந்தம் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
வழக்கை விசாரித்த பூந்தமல்லி நீதிமன்றம் கடந்த 2004ம் ஆண்டு ராஜகோபாலுக்கு 10 ஆண்டு கடுங்காவல் சிறைத் தண்டனையும், 55 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்தது.
கொலைக்கு உடந்தையாக இருந்த 8 பேருக்கு 9 ஆண்டுகள் வரை தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது. மேலும் சாந்தகுமாரை கடத்திய வழக்கில் ராஜகோபாலுக்கு 3 ஆண்டும், மற்ற 8 பேருக்கு இரண்டு ஆண்டுகளும் தண்டனை அளித்தது.
இதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் 9 பேரும் மனு செய்தனர். இதையடுத்து தண்டனையை நிறுத்தி வைத்த உயர்நீதிமன்றம் 9 பேருக்கும் ஜாமீன் வழங்கியது.
இந் நிலையில் இதை எதிர்த்து அரசுத் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதனை விசாரித்த நீதிமன்றம் நேற்று ராஜகோபால், டேனியல், கார்மேகம், ஜாகீர் உசேன், காசிவிசுவநாதன், பட்டுராஜன் ஆகிய 6 பேருக்கு தண்டனையை அதிகரித்து ஆயுள் தண்டனை வழங்கி உத்தரவிட்டது.
தமிழ்செல்வன், சேது, முருகானந்தம், ஆகியோருக்கு பூந்தமல்லி நீதிமன்றம் விதித்த அதே தண்டனையை உறுதி செய்தது.
மேலும் 9 பேரின் ஜாமீனும் ரத்து செய்யப்பட்டது. அவர்களை உடனடியாக கைது செய்யவும் உத்தரவிட்டது.
இன்று தீர்ப்பு கூறப்பட்ட போது ராஜகோபால் உள்ளிட்ட 9 பேரும் நீதிமன்றத்துக்கு வரவில்லை. இந் நிலையில் இந்த வழக்கில் ராஜகோபால் இன்று அல்லது நாளை வழக்கு விசாரணை நடந்து வரும் பூந்தமல்லி நீதிமன்றத்தில் சரணடைவார் என்று தெரிகிறது.
மேலும் அவருக்கு வழங்கப்பட்ட ஆயுள் தண்டனையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்படும் என அவரது வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.