For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சுயேச்சைகள் சுவர் விளம்பரம் செய்ய அனுமதி தேவை - மன்சூர் அலிகான் வழக்கு

By Sridhar L
Google Oneindia Tamil News

சென்னை: சுயேச்சை வேட்பாளர்கள் தேர்தலுக்காக சுவர்களில் விளம்பரங்கள் செய்ய அனுமதிக்க வேண்டும் என நடிகர் மன்சூர்அலிகான் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இதுபற்றி பதில் தருமாறு தேர்தல் கமிஷனுக்கு நோட்டீசு அனுப்பும்படி நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

நடிகர் மன்சூர்அலிகான் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:

நான் ஏற்கனவே புதிய தமிழகம் சார்பில் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு 1 லட்சம் ஓட்டுகளை வாங்கியுள்ளேன். வரும் பாராளுமன்ற தேர்தலில் நான் சுயேச்சையாக போட்டியிட உள்ளேன்.

தமிழகத்தை பொறுத்தவரையில் வேட்பு மனு பரிசீலனைக்கு பிறகு, ஏப்ரல் 27-ந் தேதி தான் தேர்தல் சின்னம் ஒதுக்கப்படுகிறது. மே 13-ந் தேதி தேர்தல் நடத்தப்படுகிறது. இதற்கு இடைப்பட்ட காலத்தில் 10 நாட்கள் மட்டுமே தேர்தல் பிரசாரம் செய்ய அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

அங்கீகரிக்கப்பட்ட தேர்தல் கட்சிகள் தங்களுக்குரிய பிரபலமான தேர்தல் சின்னங்களை வைத்து இப்போதே பிரசாரத்துக்கு தயாராகிவிட்டனர். ஆனால், தேர்தலுக்கு 10 நாட்களுக்கு முன்பு சுயேச்சை வேட்பாளர்களுக்கு சின்னம் ஒதுக்கப்படுவதால் இந்த சின்னத்தை வைத்து அந்த 10 நாளில் மக்களுக்கு எடுத்துக்கூறி பிரசாரம் செய்வது இயலாத காரியமாகும்.

அரசியல் கட்சிகளுக்கும், சுயேச்சை வேட்பாளர்களுக்கும் இடையே தேர்தல் விதிகள் பாரபட்சமாக அமைந்துள்ளது. சுவர் விளம்பரம் செய்ய தேர்தல் கமிஷன் தடை விதித்திருப்பதால் 10 நாளில் சுயேச்சை வேட்பாளர்கள் பிரசாரம் செய்ய இயலாது.

நாட்டில் பெரும்பாலானோர் போதிய கல்வி பெற்றதாக இல்லாததால், தேர்தல் சின்னங்களை காட்டித்தான் வேட்பாளர்களை அடையாளம் காட்ட முடியும்.

ஆகவே, 30 அங்குலம் உயரம், 40 அங்குலம் அகலம் என்ற அளவில் சுவர்களில் விளம்பரம் செய்ய சுயேச்சை வேட்பாளர்களுக்கு அனுமதிக்க வேண்டும். இதனால் பெரிய அரசியல் கட்சிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது.

சினிமா படங்களுக்கு ஆண்டு முழுவதும் சுவர் விளம்பரம் செய்ய அனுமதிக்கப்படும்போது, 5 ஆண்டுக்கு ஒருமுறை தேர்தலில் போட்டியிடும் சுயேச்சை வேட்பாளர்களுக்கு கட்டுப்பாடு அளித்து சுவர் விளம்பரம் செய்ய அனுமதிப்பதால் எந்த பாதிப்பும் ஏற்படாது.

இதற்காக தேர்தல் நடத்தை விதிகள் திருத்தம் கொண்டு வர தேர்தல் கமிஷனுக்கு உத்தரவிட வேண்டும்.

தேர்தல் கமிஷனுக்கு நோட்டீஸ்

இந்த மனு நீதிபதி கே.சுகுணா முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. நேற்று கோர்ட்டு புறக்கணிப்பு நடைபெற்றதால், நடிகர் மன்சூர்அலிகானே கோர்ட்டில் ஆஜராகி வாதாடினார்.

இதுபற்றி பதில்தருமாறு தேர்தல் கமிஷனுக்கு நோட்டீசு அனுப்பும்படி நீதிபதி உத்தரவிட்டார். இந்த வழக்கு வரும் 26-ந் தேதி (வியாழக்கிழமை) மீண்டும் விசாரணைக்கு வருகிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X