கருணாநிதிதான் கட்சிகளை உடைப்பவர் - நான் அல்ல: வைகோ
சென்னை: என்னை சகுனி என்கிறார் கருணாநிதி. ஆனால் கட்சிகளை உடைக்கும் சதி வேலைகளைச் செய்வது அவர்தான் என்று கூறியுள்ளார் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ.
மதிமுக கொள்கை விளக்க அணிச் செயலாளர் நாஞ்சில் சம்பத், இயக்குநர் சீமான், பெரியார் திராவிட கழகத் தலைவர் கொளத்தூர் மணி ஆகியோரை தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ததைக் கண்டித்து சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதில் கலந்து கொண்டு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பேசுகையில், திமுகவை கட்சியை உடைக்க சதி செய்த சகுனி என்று என்னை கருணாநிதி கூறுகிறார். அவர்தான் எல்லா கட்சிகளையும் உடைத்தவர்.
இந்திய இறையாண்மைக்கு எதிராகச் செயல்படும் நிலைப்பாடு மதிமுகவுக்கு கிடையாது. இந்திய இறையாண்மைக்கு ஆபத்து வந்துவிடக் கூடாது என்றுதான் கூறி வருகிறோம்.
இலங்கையில் தொடர்ந்து தமிழர்கள் கொலை செய்யப்படுவது நீடித்தால் இந்திய ஒருமைப்பாட்டுக்கு ஆபத்து ஏற்படும். அப்படி ஒரு சூழலில் டெல்லியில் உள்ள இல்லங்கள், தமிழகத்தின் தூதரகங்களாக மாறும் என்றார்.
ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் தா.பாண்டியன் பேசுகையில்,
இலங்கையில் நடப்பது இனப்படுகொலை என்று கூறியது வைகோவோ, கருணாநிதியோ, நானோ கிடையாது. இதைக் கூறியவர் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி. குண்டு போட்டு பொதுமக்களை, குழந்தைகளை கொல்வதை தடுத்து நிறுத்த வேண்டும்.
இலங்கையில் நாள்தோறும் 300 பேர் வீதம் இனப்படுகொலை செய்யப்படுகின்றனர். இதைக் கண்டித்து பேசிய நாஞ்சில் சம்பத், கொளத்தூர் மணி, சீமான் ஆகியோர் மீது தேசியப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் நோக்கம் என்ன என்று கூற வேண்டும். தேசத்தைப் பாதுகாப்பது குறிக்கோள் என்றால் தேசபக்தி என்ற பெயரில் மிக மட்டமான செயலில் ஈடுபடக் கூடாது. முதலில் எங்களை கைது செய்யுங்கள்.
கைதான மூன்று பேரையும் நிபந்தனையின்றி விடுதலை செய்ய வேண்டும். ஜனநாயக முறைப்படி தேர்தல் நடக்கும் நேரத்தில் கைது செய்திருக்கக் கூடாது என்றார்.