நானோ வருகை எதிரொலி - பங்குச் சந்தையில் காளை துள்ளல்
மும்பை: நானோவின் வருகை மற்றும் அமெரிக்க பொருளாதார மீட்சி நிலை குறித்த எதிர்பார்ப்புகள் இந்திய பங்குச் சந்தையில் ஒரு புதிய துள்ளலை ஏற்படுத்தியுள்ளது வாரத்தின் துவக்க நாளான இன்று. சென்செக்ஸில் 450 புள்ளிகளுக்கும் மேல் உயர்ந்தது. தேசிய பங்குச் சந்தை நிப்டியில் 130 புள்ளிகளுக்கும் மேல் உயர்வு காணப்பட்டது.
உலகின் மலிவு விலைக் காரான டாடா மோட்டார்ஸின் நானோ இன்று அறிமுகமாகியுள்ளது. இந்தக் காருக்கு விரைவில் முன்பதிவு துவங்குகிறது.
கடும் நஷ்டம் மற்றும் வருவாய் இழப்பைச் சந்தித்துள்ள டாடா மோட்டார்ஸ் நிறுவனத்துக்கு ஒரு மிகப் பெரிய நம்பிக்கையாக அமைந்துள்ளவை இப்போது இந்த சிறு ரகக் கார்கள்தான். இந்தக் கார்களின் முன்பதிவு மூலம் மட்டுமே ரூ.7000 கோடி வரை 15 தினங்களில் திரட்டிவிட முடியும் என நம்புகிறது டாடா மோட்டார்ஸ்.
நானோ வருகையால் இந்திய பங்குச் சந்தை வர்த்தகமும் சூடுபிடிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. அதற்கேற்ப இன்று வர்த்தகம் துவங்கியபோதே 200 புள்ளிகளுக்கும் மேல் உயர்வு கண்டது சென்செக்ஸ்.
டாடா மோட்டார்ஸின் பங்குகள் அதிகபட்சம் 8 சதவிகிதம் வரை அதிக விலைக்குக் கைமாறின.
இன்னொரு பக்கம் அமெரிக்காவின் நிதிச் சலுகைகள் காரணமாக நிறுவனங்கள் மீண்டும் பழைய நிலைக்குத் திரும்பவிடும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளதாலும் பங்கு வர்த்தகம் விறுவிறுப்பாக நடந்ததாக நிபுணர்கள் தெரிவித்தனர்.
இன்றைய வர்த்தகத்தில் பெரும் லாபம் சம்பாதித்த நிறுவனப் பங்குகள், ரான்பாக்ஸி லேபராட்டரிஸ், டாடா ஸ்டீல், ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், எச்டிஎப்சி, ரிலையன்ஸ் இன்ப்ரா பங்குகள் அதிக லாபத்தில் கைமாறின.
டிஎல்ப் பங்குகள் நஷ்டத்தில் விற்பனையாகின.
வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் 457 புள்ளிகள் அதிகரித்து 9424 ஆகவும், நிப்டியில் 132 புள்ளிகள் உயர்ந்து 2939 ஆகவும் நிலைபெற்றன.