நிபந்தனையின்றி பேச்சுவார்த்தைக்கு தயார் - புலிகள் அறிவிப்பு
கொழும்பு: எந்தவித நிபந்தனையும் இன்றி பேச்சுவார்த்தைக்கு வர நாங்கள் தயார். அப்பாவிகள் உயிரிழப்பைத் தடுக்க போர் நிறுத்தம் அவசியம் என்று விடுதலைப் புலிகள் கூறியுள்ளனர். ஆனால் இதை இலங்கை அரசு நிராகரித்து விட்டது.
இதுகுறித்து சன்டே டைம்ஸ் இதழுக்கு விடுதலைப் புலிகள் இயக்க அரசியல் பிரிவு தலைவர் பா.நடேசன் அளித்துள்ள பேட்டியில், இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்படவேண்டும். இதை உரக்கவும் தெளிவாகவும் நாங்கள் கூறுகிறோம்.
பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு மனிதாபிமான உதவிகள் தொடர்ந்து மறுக்கப்படுவதும், தொடர் ராணுவத் தாக்குதலும், வான்வெளி தாக்குதலும் நிலைமையை மோசமாக ஆக்கியுள்ளது. இதைப் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.
நாள்தோறும் நடத்தப்படும் இந்தத் தாக்குதல்களை ஓர் இனப் படுகொலை போர்முறை என்றே கூறலாம்.
தமிழர்ப் பகுதியில் தற்போதுள்ள நிலைமையை சர்வதேசக் கண்காணிப்புக் குழுவினர் பார்வையிட வேண்டும். புலம்பெயர்ந்துள்ள மக்கள் தங்களது இருப்பிடங்களுக்கு திரும்ப அனுமதிக்க வேண்டும். அதன் பிறகு அங்கு சுதந்திர தமிழ் மாநிலம் குறித்து கருத்துக் கணிப்பு நடத்த வேண்டும். அதில் தெரிவிக்கப்படும் எந்த மாதிரியான முடிவையும் நாங்கள் ஏற்கத் தயார் என்று கூறியிருந்தார்.
ஆனால் இதை இலங்கை அரசு நிராகரித்துள்ளது. முதலில் விடுதலைப் புலிகள் ஆயுதங்களைக் கீழே போட வேண்டும். அப்போதுதான் பேச்சுவார்த்தை நடத்த முடியும். விடுதலைப் புலிகளிடமிருந்து எங்களுக்கு இந்தக் கோரிக்கை குறித்து எந்தத் தகவலும் இல்லை என்று இலங்கை அரசு கூறியுள்ளது.