மன்மோகன் சிங்கே பிரதமர் வேட்பாளர்-சோனியா
காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை இன்று டெல்லியில் சோனியா காந்தி வெளியிட்டார்.
அவருடன் பிரதமர் மன்மோகன் சிங், வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி ஆகியோரும் கலந்து கொண்டனர்.
பின்னர் சோனியா காந்தி பேசுகையில், மக்களின் பாதுகாப்பு, மரியாதை, வளர்ச்சி ஆகியவையே காங்கிரஸ் கட்சியின் இலக்கு என்றார்.
தொடர்ந்து அவர் பேசுகையில், நாட்டின் அடுத்த பிரதமராக மீ்ண்டும் மன்மோகன் சிங்கே பதவியேற்பார். இந்தப் பதவிக்கு பலரும் போட்டி போடலாம். ஆனால் பொருத்தமானவர் டாக்டர் மன்மோகன் சிங் மட்டுமே.
மன்மோகன் சிங்குக்கு முன்பு யாரும் நிற்கக் கூட முடியாது. அனுபவம், திறமை இரண்டும் ஒருங்கிணைந்தவர் மன்மோகன் சிங் மட்டுமே.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் கடந்த ஐந்து ஆண்டு கால சாதனைகளை மனதில் கொண்டு மக்கள் காங்கிரஸுக்கு வாக்களிப்பார்கள்.
பிரதமர் பதவிக்கு வர வேண்டும் என்ற எண்ணம் எனக்கு அறவே இல்லை. இதுகுறித்த எனது நிலைப்பாடு அப்படியேதான் இருக்கிறது.
நலிவடைந்த சமூகத்தினர், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் மற்றும் சிறுபான்மையினர் நலனுக்காக காங்கிரஸ் கட்சி பாடுபடும்.
நாடு முழுவதும் பலமாக வேரூண்றியுள்ள ஒரே கட்சி காங்கிரஸ் மட்டுமே என்றார் சோனியா காந்தி.
இதுகுறித்து நிருபர்கள் கேள்வி கேட்டபோது, எனது நிலைப்பாடு அப்படியேதான் இருக்கிறது. அதில் மாற்றம் ஏதும் வரப் போவதில்லை. காங்கிரஸ் கட்சியின் பிரதமர் வேட்பாளர் மன்மோகன் சிங் மட்டுமே. இதற்கு மேல் என்ன எதிர்பார்க்கிறீர்கள் என்றார் சோனியா.