என்.எஸ்.ஜி. கமாண்டோக்கள் சென்னை வருகை
மும்பை தீவிரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து என்.எஸ்.ஜி. கமாண்டோப் படையை நாட்டின் முக்கிய நகரங்களில் அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அந்த நகரங்களில் ஒன்று சென்னை.
இந்த நிலையில் சென்னை நகரின் உயர் பாதுகாப்பு பகுதிகளை அடையாளம் கண்டு அவற்றின் பாதுகாப்புத் தன்மை, சுற்றுச்சூழல் குறித்து அறிந்து கொள்ளவும், 75 கமாண்டோ வீரர்கள் சென்னை வந்துள்ளனர்.
விமானப்படை விமானம் மூலம் கமாண்டோக்கள் பழைய விமான நிலையத்திற்கு வந்து சேர்ந்தனர். வந்தவுடனேயே அவர்கள் தங்களது பணியைத் தொடங்கினர்.
முதல் பணியாக கல்பாக்கம் சென்ற அவர்கள் அங்குள்ள பாதுகாப்பு நிலவரம் குறித்து ஆய்வு செய்தனர்.
வரும் நாட்களில் சென்னை மாநகரம் மற்றும் புறநகர்ப் பகுதிகளில் உள்ள முக்கிய இடங்கள், கட்டட வளாகங்கள், பாதுகாப்பு வளையப் பகுதிகளை சுற்றிப் பார்த்து ஆய்வு செய்யவுள்ளனர்.
கல்பாக்கத்திற்கு மீண்டும் சென்று ஆய்வு நடத்தத் திட்டமிட்டப்பட்டுள்ளது.
வண்டலூரில் என்.எஸ்.ஜி. முகாம்..
சென்னையில்தான் என்.எஸ்.ஜி. படையின் பிராந்திய அலுவலகம் அமையவுள்ளது. 2 மாதங்களுக்கு முன்புதான் தமிழக அரசு அதிகாரிகளும், என்.எஸ்.ஜி அதிகாரிகளும் அல்மாத்தி, எருமைவெட்டிப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளை பார்வையிட்டனர்.
இறுதியில் வண்டலூர் - கேளம்பாக்கம் சாலையில் உள்ள நெற்குன்றம் என்ற இடத்தில் 90 ஏக்கர் நிலம் முடிவு செய்யப்பட்டது.
விமான நிலையம், முக்கிய தேசிய நெடுஞ்சாலை உள்ளிட்டவற்றை அடிப்படையாக வைத்து இந்த இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
முதலில் 1000 ஏக்கர் நிலம் தேவைப்படும் என என்.எஸ்.ஜி. தரப்பில் கோரப்பட்டது. இருப்பினும் தற்போதைக்கு 90 ஏக்கர் நிலம் முடிவாகியுள்ளது. போகப் போக என்.எஸ்.ஜி. படையின் தமிழக பிராந்திய பிரிவு மேலும் விரிவுபடுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
என்.எஸ்.ஜி பிரிவு முகாம் அமையவுள்ள நெற்குன்றம் பகுதி அருமையான சாலை வசதியுடன் கூடியது. வண்டலூர் உயிரியில் பூங்காவையொட்டி இது அமையவுள்ளது. இதற்கு எதிரேதான் காவல்துறை பயிற்சி அகாடமி உள்ளது.
தற்போது பார்க்கப்பட்டுள்ள இடத்திற்கு அருகே இரண்டு பெரிய ஏரிகள் உள்ளன. குடிநீர்ப் பிரச்சினை அறவே கிடையாது. இப்பகுதியில் சிறிய மலைக்குன்றும் உள்ளது. எனவே துப்பாக்கி சுடும் பயிற்சிக்கு எந்தவித சிக்கலும் இல்லை.
இப்படிப் பல வகைகளிலும் இது சாதகமானதாக இருந்ததால்தான் இந்த இடத்தை என்.எஸ்.ஜி. தேர்வு செய்துள்ளது.