இலங்கை: விவேகம் இல்லாத வீரம் வேண்டாம்!
சென்னை: இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக பேசுவதாக நினைத்து, இந்திய நாட்டின் ஒருமைப்பாட்டுக்கு எதிராகப் பேசி வீரம் காட்ட நினைத்தால் அது தமிழர்களின் நலனுக்கு நல்லதல்ல என்று தமிழக பாஜக தலைவர் இல.கணேசன் கூறியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
இலங்கைத் தமிழர் இன்னல் தீர்க்க வேண்டும் என்பதில் இந்தியத் தமிழர்கள் உணர்வுப்பூர்வமாக அக்கறை கொண்டுள்ளார்கள். இலங்கை தமிழர்களுக்காக விடுதலைப் புலிகள் இயக்கம் பாடுபடுகிறது என்கிற எண்ணத்தில் தமிழகத்தில் விடுதலைப் புலிகளது முகாம் செயல்பட்ட காலங்களில் பரவலாக மக்கள் ஆதரித்தார்கள்.
ஆனால் ராஜீவ் காந்தி படுகொலைக்கு பிறகு ஒரு பின்னடைவு ஏற்பட்டது. சாதாரண மக்கள் மட்டுமல்ல விடுதலைப் புலிகளை பகிரங்கமாக ஆதரித்த அமைப்புகளும் பின்வாங்கின. என்ன பொருள்? இலங்கை தமிழர் நலன் காக்க இந்திய தமிழர்கள் அக்கறை கொண்டிருந்தாலும், எந்த வகையிலும் அது இந்திய நாட்டை பாதிக்கக்கூடாது என்பதில் தமிழர்கள் எச்சரிக்கையாக இருக்கிறார்கள்.
தற்போது இலங்கை தமிழர்கள் போர் முனையில் அன்றாடம் செத்து மடிந்து கொண்டிருக்கிறார்கள். போர் நிறுத்தம் ஏற்பட்டு, அவர்களது பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டு நிரந்தரமாக இலங்கை தமிழர்கள் சம உரிமை பெற வேண்டும் என்பதில் இந்திய தமிழர்கள் ஒன்றுபட்டுள்ளார்கள்.
இந்த நேரத்தில் இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக பேசுவதாக நினைத்து, இந்திய நாட்டின் ஒருமைப்பாட்டுக்கும் இறையாண்மைக்கும் எதிராக பேசி வீரம் காட்டுவதாக நினைத்தால் இவர்களது நடவடிக்கையால், ஆதரவு தெரிவிக்கும் தேசிய எண்ணம் கொண்ட பெருவாரியானவர்கள் பின்வாங்குவார்கள்.
அதனால், இலங்கை தமிழர்களுக்காக போராடும் இயக்கத்துக்கு பின்னடைவு ஏற்படும். இவர்களது பேச்சு இலங்கை தமிழர்களுக்கு பாதிப்பை உண்டாக்கும். எந்த காரணத்தை முன்னிட்டும் இலங்கை தமிழர்கள் நலன் விரும்பும் தேசியவாதிகள் இந்திய இறையாண்மைக்கும் எதிரான எந்த செயலையும் ஏற்க மாட்டார்கள். இத்தகைய பேச்சுகள் விவேகம் இல்லாத வீரம் என்று கூறியுள்ளார்.