மன்மோகன் ஒரு ஜென்டில்மேன்-ராகுல் காந்தி
புதுச்சேரி: காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி இன்று புதுச்சேரி வந்தார்.
டெல்லியிலிருந்து சென்னைக்கு விமானம் மூலம் வரும் ராகுல் காந்தி பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் முதலில் காரைக்காலுக்கு வந்தார். அங்கு இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய அவர் புதுச்சேரி சென்றார்.
உப்பளம் துறைமுக வளாகத்திற்கு ஹெலிகாப்டரில் வந்திறங்கிய அவருக்கு காங்கிரஸ் நிர்வாகிகள் சிறப்பான வரவேற்பு அளித்தனர். பின்னர் கார் மூலம் அவர் புனித அந்தோணியார் சமுதாய நலக்கூடத்திற்குச் சென்ற அவர் அங்கு பெண்களை சந்தித்து உரையாடினார்.
பின்னர் ஆனந்தா திருமண நிலையத்தில் இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகளுடன் தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடத்திவிட்டு செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அவரிடம் வருண் காந்தியின் பேச்சு குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பியபோது,
வருணுக்கு அவர் விரும்பியதைப் பேச உரிமை உண்டு. ஆனால், யாருக்கும் அடுத்தவர் மீது வெறுப்போ, கோபமோ கூடாது. அடுத்தவரை புண்படுத்தும் பேச்சு சரியல்ல. இது குறித்து பிரியங்கா விவரமாக கருத்து தெரிவித்துவிட்டார். நான் மேலும் பேச விரும்பவில்லை.
ஆனால், ஒன்று மட்டும் சொல்வேன். வருணின் பேச்சு எனக்கு அதிர்ச்சியைத் தந்தது. பிரதமர் மன்மோகன் சி்ங் பாஜகவினர் கூறுவது போல பலவீமானவர் அல்ல. இந்த நாட்டுக்கு நிறைய நல்லது செய்த மனிதர். அவர் மிகச் சிறந்த மனிதாபிமானி. மிகச் சிறந்த ஜென்டில்மேன். அப்படிப்பட்ட நபர்களைப் பார்ப்பதே அரிது. அவரது நடவடிக்கைகளே அவரது தரத்துக்கு எடுத்துக்காட்டு.
அதே நேரத்தில் பெரியவர்கள் குறித்து நான் தீர்ப்பு சொல்ல விரும்பவில்லை. நான் ரொம்ப சிறியவன் என்றார்.