கணவனுக்கு திருட்டு பட்டம்- குழந்தைகளுடன் பெண் தீக்குளிப்பு
கோவை: கணவர் மீது திருட்டுப் பழி சுமத்தியதால் மனம் உடைந்த மனைவி தனது 2 குழந்தைகளுடன் தீக்குளித்தார். இதில் ஒரு குழந்தை சிகிச்சைப் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தது.
கோவை அன்னூர் பகுதியைச் சேர்ந்தவர் செந்தில் குமார் (32). கார் மெக்கானிக்காக பணியாற்றி வருகின்றார். இவரது மனைவி மாலதி (27). இவர்களுக்கு மதுமதி (2), நிதிஷ்குமார் (1)என்ற இரு குழந்தைகள் உள்ளது.
அன்னூர் பகுதியில் செந்தில்குமார் நின்று கொண்டிருந்த போது அங்கிருந்த பைக் ஒன்று காணாமல் போய்விட்டது. அதற்கு செந்தில்குமார் தான் காரணம் என்று சந்தேகப்பட்ட அப்பகுதி மக்கள் அவரை அடித்து உதைத்து போலீசில் ஒப்படைத்தனர்.
தகவல் அறிந்த அவரது மனைவி மாலதி மன உளைச்சல் காரணமாக வீட்டில் தனது 2 குழந்தைகளுடன் உடம்பில் மண்ணெண்ணை ஊற்றி தீக்குளித்தார். இதில் படுகயாம் அடைந்த அவர்கள் மூவரையும் அக்கம் பக்கத்தினர், கோவை அரசு பொது மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், சிகிச்சை பலனின்றி குழந்தை மதுமதி பரிதாபமாக உயிரிழந்தார்.
மற்றொரு குழந்தையும், தாயும் அபாய கட்டத்தில் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் குறித்து அன்னூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.