பணவீக்கம்: பயம் வேண்டாம்! - பிரதமர்
டெல்லி: பணவீக்கம் பூஜ்யத்தை நோக்கிச் செல்வதை எண்ணி பயப்பட வேண்டாம். இந்தியாவின் பொருளாதாரம் அடுத்த 7 மாதங்களில் சரிவிலிருந்து மீண்டுவிடும் என்று பிரதமர் மன்மோகன்சிங் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை வெளியிட்ட பிறகு மன்மோகன் சிங் கூறுகையில் இதைத் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறியதாவது:
பணவீக்கம் பூஜ்யத்தை நோக்கிச் செல்வது குறித்து பயப்படவேண்டும். இது மக்களை பாதிக்காது. நாட்டில் பல தரப்பு மக்களின் வருமானமும் உயரத் தொடங்கியுள்ளது பொருளாதாரம் மீட்சியடைவதற்கான அறிகுறிதான்.
இதற்குக் காரணம் மத்திய அரசு அறிவித்த பொருளாதார சலுகையின் பலன்கள்தான். பணவீக்கம் முழுமையாகக் குறைந்துவிட்டது. பொருளாதார நிலை அடுத்த ஆறு முதல் 7 மாதங்களில் மீட்சியடையும் என்ற நம்பிக்கை இப்போது ஏற்பட்டுள்ளது.
இன்னும் மத்திய அரசு அறிவித்து பல சலுகைகளின் பலன்கள் முழுமையாகக் கிடைக்கும் போது நாட்டின் பொருளாதாரம் முழுமையான இயல்பு நிலைக்குத் திரும்பிவிடும்.
விவசாயிகளுக்கு முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு கொள்முதல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இதன் பலனும் இன்னும் சில வாரங்களிலேயே தெரிந்துவிடும்.
ஏழைகள் மற்றும் மத்தியதர மக்கள் வீடு கட்டிக் கொள்வதற்காக சிமென்ட், இரும்பு உள்ளிட்ட கட்டுமான பொருள்களின் விலை குறைக்கப்பட்டுள்ளது. இன்னும்கூட இந்த விலைகளைக் குறைக்கும் திட்டமுள்ளது.
நாட்டின் வளர்ச்சி விகிதம் 3.5 சதவீதமாகக் குறைந்துவிடும் என்ற கணிப்புகளை நம்ப வேண்டும். இப்போது 5.3 சதவீததமாக உள்ள வளர்ச்சி விகிதம் 7 சதவீதமாக உயர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றார் பிரதமர்.