முலாயம்-லாலு-பாஸ்வான் திடீர் கூட்டணி
டெல்லி: பீகாரில் சமாஜ்வாடி கட்சியுடன் திடீரென லாலு பிரசாத் யாதவும், ராம் விலாஸ் பாஸ்வானும் கூட்டணி அமைத்துள்ளனர்.
பீகாரில் காங்கிரஸும் முதலில் லாலு, பாஸ்வான் கூட்டணியில்தான் இருந்தது. ஆனால் சீட்டு விளையாட்டு போல 3 சீட் மட்டுமே லாலுவும், பாஸ்வானும் கொடுத்து காமெடி செய்ததால் கடுப்பான காங்கிரஸ் 37 தொகுதிகளில் தனித்துப் போட்டியிடுவோம் என அறிவித்தது.
மேலும், லாலு பிரசாத் நம்பிக்கை துரோகம் செய்து விட்டார் என்றும் காங்கிரஸ் வர்ணித்தது. இதனால் வெகுண்ட லாலு பிரசாத், காங்கிரஸுக்குக் கொடுத்த 3 தொகுதிகளிலும் எனது கட்சியே போட்டியிடும், அவர்களுக்கு ஒரு சீட் கூட கிடையாது என்றார்.
இந்த நிலையில் முலாயம் சிங் யாதவுடன் திடீரென லாலு பிரசாத் யாதவும், பாஸ்வானும் புதுக் கூட்டணி அமைத்துள்ளனர்.
இதற்குப் பிரதிபலனாக பீகாரில், ராஷ்டிரிய ஜனதாதளம், லோக் ஜனசக்தி வேட்பாளர்களுக்கு எதிராக யாரையும் நிறுத்த மாட்டோம் என சமாஜ்வாடி கட்சி அறிவித்துள்ளது.
ஆனால் பீகாரில் உள்ள நாற்பது தொகுதிகளிலும் லாலு, பாஸ்வான் கட்சிகள் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே வெறும் ஆதரவை மட்டுமே முலாயம் சிங்கிடமிருந்து லாலு-பாஸ்வான் ஜோடி எதிர்பார்ப்பதாக தெரிகிறது.
ஏற்கனவே நான் உ.பிக்குப் போய் சமாஜ்வாடி கட்சிக்காக பிரசாரம் செய்வேன். அதேபோல, முலாயம் சிங் யாதவும் பீகாருக்கு வந்து ராஷ்டிரிய ஜனதாதளம், லோக் ஜனசக்தி வேட்பாளர்களுக்காக பிரசாரம் செய்வார் என்று கூறியிருந்தார். இதன் அடிப்படையில் தற்போது இவர்களுக்குள் கூட்டணி உருவாகியுள்ளது.