கலவரம்-குஜராத் பெண் அமைச்சர் போலீசில் சரண்
அகமதாபாத்: குஜராத்தில் கடந்த 2002ம் ஆண்டு முஸ்லீம்களுக்கு எதிராக பெரும் வன்முறையைத் தூண்டி விட்ட பெண் அமைச்சர் மாயா பென் கோத்னானி தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு போலீசில் சரணடைந்தார்.
கடந்த 2002ம் ஆண்டு கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்திற்குப் பின்னர் அங்கு முஸ்லீம்களுக்கு எதிராக பெரும் கலவரம் மூண்டது.
இதில், பெண் அமைச்சர் மாயா பென் கோத்னானி சங் பரிவார் ஆட்களோடு பெரும் கலவரத்தை அரங்கேற்றினார்.
இதுதொடர்பாக அவர் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் அவரை உச்சநீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட சிறப்பு விசாரணைக் குழு விசாரணைக்கு அழைத்தது. ஆனால் அவர் வரவில்லை, தலைமறைவாகி விட்டார்.
இந்த நிலையில் அவர் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்திருந்தார். அதன் பேரில் உள்ளூர் கோர்ட் முன்ஜாமீன் அளித்தது. இதையடுத்து உயர்நீதிமன்றத்தில் சிறப்பு புலனாய்வுக்குழு அப்பீல் செய்தது. அதில் அவருக்கு முன்ஜாமீன் தரப்பட்டதை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது.
இதையடுத்து தனது பதவியை இன்று காலை மாயா பென் ராஜினாமா செய்தார். பிற்பகலில் போலீசில் சரணடைந்தார்.