வருணை கைது செய்ய திருமாவளவன் கோரிக்கை
சென்னை: சமூக ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையில் பேசியிருக்கம் வருண் காந்தியை கைது செய்ய வேண்டும். அவர் தேர்தலில் போட்டியிட தகுதியற்றவர் என அறிவிக்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
அவர் கூறுகையில்,
பாஜக கட்சி வேட்பாளர் வருண் காந்தியின் தேர்தல் பிரச்சார பேச்சு சமூக ஒற்றுமையை சீர்குலைப்பதாக இருக்கிறது. இது அமைதி விரும்பும் அனைவரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.
நேரு குடும்பத்துக்கு இழுக்கு...
வருண் காந்தியின் இந்த போக்கை பாஜகவும், அவரது தாயாரும் தட்டி கொடுத்து வளர்த்து வருகின்றனர். அவர் தேர்தலில் போட்டியிட தகுதியற்றவர் என உடனடியாக அறிவிக்க வேண்டும். உடனடியாக அவரை கைது செய்ய வேண்டும். ஜவஹர்லால் நேருவின் பாரம்பரியம் மிக்க குடும்பத்தில் இருந்த வந்த ஒருவர் பேசியிருப்பது, நேருவின் குடும்பத்துக்கு இழுக்கை தேடி தந்துள்ளது.
மதவாத சக்திகளை முறியடியுங்கள்...
தமிழகத்தில் ஈழத்தமிழர் பிரச்சினையை துருப்பு சீட்டாக வைத்து ஜெயலலிதா அரசியல் ஆதயம் தேடப்பார்க்கிறார். கச்சத்தீவை புனித பகுதியாக அறிவிப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் ஜெயலலிதா ஏன் ராமர் பாலத்தை பாஜக புனித பகுதியாக அறிவிப்போம் என அறிக்கைவிட்ட போது எதிர்க்கவில்லை. பாஜகவை ஏன் கண்டிக்கவில்லை.
அதிமுக, பாஜக போன்ற கட்சிகள் மதவெறி போக்கை கடைப்பிடிக்கின்றன என்பதை பொதுமக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் சுட்டிக்காட்ட விரும்புகிறது. இஸ்லாமிய், கிறிஸ்தவ மற்ற சிறுபான்மை மக்களும் இதர ஜனநாயக சக்திகளும் விழிப்பாக இருந்து இவர்களை முறியடிக்க வேண்டும் என்றார் திருமா.