பெண்ணை கற்பழித்து கொன்ற சித்தப்பா-மாமா
கடையநல்லூர் கரியமாணிக்க பெருமாள் கோவில கீழஅக்ரஹாரத்தை சேர்ந்த வெங்கடாசலம் மகன் சுப்பிரமணியன். சென்னையில் வீடியோ மற்றும் போட்டோகிரபராக உள்ளார். இவரது மனைவி பிருந்தா. திருமணமாகி 4 மாத கைக்குழந்தை உள்ளது.
பிருந்தா தனது மாமனார் வெங்கடாசலத்துடன் அவரது உறவினர் வெங்கட்ராமன் என்பவர் வீட்டில் வாடகைக்கு குடியிருந்து வந்தார். இவர்களுடன் வெங்கடாசலத்தின் தம்பி வைத்தியநாதனும் தங்கியிருந்தார்.
பெங்களூரில் வசித்து வரும் வெங்கட்ராமன் சமீபத்தில் வயல் அறுவடைக்காக கடையநல்லூருக்கு வந்திருந்தார். இவர் வட்டார வளர்ச்சி அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்றவர். இங்கு வெங்கடாசலம் வீட்டில் தங்கியிருந்தார். இதற்கிடையில் வெங்கடாசலம் தென்காசியில் மருத்துவமனையில் சிகிச்சை பெறறு வரும் தனது மகளை பார்க்க சென்றார்.
இந்நிலையில் கடந்த 23ம் தேதி அதிகாலை வீட்டின் பின்புறம் உடல் கருகிய நிலையில் பிருந்தா பிணமாக கிடந்தார். தகவல் அறிந்ததும் கடையநல்லூர் டிஎஸ்பி (பொறுப்பு) பாலகிருஷ்ணன், இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் மற்றும் போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
விசாரணையில், சுப்பிரமணியனின் மாமா வெங்கட்ராமனும், சித்தப்பா வைத்தியநாதனும் சேர்ந்து கடந்த 23ம் தேதி அதிகாலை 4.30 மணிக்கு பிருந்தாவை கற்பழித்து கொலை செய்தது தெரிய வந்தது.
பின்னர் அவர்கள் வீட்டின் பின்புறம் உள்ள பகுதியில் பிருந்தாவின் உடலை தூக்கி எறிந்து மண்எண்ணெய் ஊற்றி எரித்துள்ளனர் என்பதை போலீசார் கண்டுபிடித்தனர். இதையடுத்து அவர்கள் 2 பேரையும் கடையநல்லூர் இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் கைது செய்து செங்கோட்டை நீதிபதி ஜெயக்குமார் முன்பு ஆஜர்படுத்தினார்.
பின்னர் 2 பேரும் பாளை சிறையில் 15 நாள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். கொலையான பிருந்தா, வெங்கட்ராமனுக்கு பிருந்தா மகள் உறவு என்பதும், வைத்தியநாதனுக்கு பிருந்தா மருமகள் உறவு என்பதும் குறிப்பிடத்தக்கது.