இந்தோனேசியா: அணை உடைந்து 'மினி சுனாமி'-50 பேர் பலி
நூற்றுக்கணக்கான வீடுகள் சேதமடைந்தன. வெள்ளிக்கிழமை அதிகாலை இந்த மினி சுனாமித் தாக்குதல் நடந்துள்ளது.
அணை உடைந்ததால் 10 அடி உயரத்திற்கு தண்ணீர் சீறிப் பாய்ந்து வந்ததால் மக்கள் நீரில் மூழ்கி பலியாகியுள்ளனர்.
இறந்த அனைவரும் தெற்கு ஜகார்தாவில் உள்ள சிரென்டு என்ற தொழிற்பேட்டை பகுதயைச் சேர்ந்தவர்கள். இறந்தவர்களில் நான்கு பேர் சிறார்கள்.
உயிரிழப்பு மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. சீறிப் பாய்ந்து வந்த தண்ணீருக்கு யாரும் தப்பியிருக்க முடியாது என்று அஞ்சப்படுகிறது.
அப்பகுதியில் உள்ள நூற்றுக்கணக்கான வீடுகளில் தண்ணீர் புகுந்துள்ளது. பல வீடுகள் சேதமடைந்துள்ளன. மினி சுனாமியைப் போல இது காணப்பட்டதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
அணை உடைவதற்கு முன்பு அப்பகுதியில் கன மழை பெய்துள்ளது. பலத்த காற்றும் வீசியது. ஏராளமான மரங்கள் பெயர்த்து எறியப்பட்டன. அப்போது அதிகாலை என்பதால் மக்கள் அனைவரும் வீடுகளில் தூங்கிக் கொண்டிருந்தனர். அணை உடைந்தது அவர்களுக்குத் தெரியவில்லை.
20 பேர் படுகாயத்துடன் மீட்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து அப்பகுதியில், மீட்பு மற்றும் தேடுதல் வேட்டை நடந்து வருகிறது. பலரைக் காணவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.