திரையுலகுக்கு நற்செய்தி - பொருளாதார சரிவால் திருட்டு சிடி விற்பனை மந்தம்!
உலகப் பொருளாதார சரிவால் பல துறைகளிலும் பெரும் சரிவும், சீர்குலைவும் காணப்படுகின்றன. இந்த நிலையில் பொருளாதார சரிவால் ஒரு பாசிட்டிவ் மேட்டரும் நடந்துள்ளது. அது திருட்டு விசிடி துறைக்கு ஏற்பட்டுள்ள சரிவு.
பொருளாதார நிலை சரியில்லாததால், திருட்டு விசிடி உற்பத்தியும், விற்பனையும் கடந்த ஆண்டு வெகுவாக குறைந்து விட்டதாம்.
டெல்லி பாலிகா பஜாரில் திருட்டு விசிடி விற்பனை கொடி கட்டிப் பறக்கும். ஆனால் அங்கு தற்போது விற்பனை வெகுவாக சரிந்து விட்டதாம். வர்த்தகர்கள் சோகத்துடன் கூறுகிறார்கள்.
இதே நிலைதான் டெல்லியின் பிற திருட்டு விசிடி விற்பனை கூடங்களிலும் நிலவுகிறதாம்.
வழக்கமான விற்பனையில் 50 முதல் 70 சதவீதம் வரை குறைந்து போய் விட்டதாக கூறுகிறார் விற்பனையாளரான ராகுல்.
இன்னொரு பாலிகா பஜார் கடைக்காரர் கூறுகையில், எங்களது கடையில் முன்பு எட்டு பேர் வேலை பார்த்தனர். அத்தனை பேரும் சுறுசுறுப்பாக இருப்பார்கள். யாருக்கும் உட்காரக் கூட நேரம் கிடைக்காது.
ஆனால் இப்போது ஐந்து பேர்தான் உள்ளனர். அதிலும் 2 பேருக்கு வேலை இல்லாமல் மோட்டுவளையைத்தான் பார்த்துக் கொண்டிருக்க வேண்டியுள்ளது. அந்த அளவுக்கு விற்பனை மந்தமாகி விட்டது. வாடிக்கையாளர்கள் கடைக்கு வருவது குறைந்து விட்டது. அப்படியே யாராவது வந்தாலும் வேடிக்கை பார்த்து விட்டுப் போய் விடுகிறார்கள். யாரும் சிடி வாங்குவதில்லை என்கிறார்.
பாலிகா பஜாரில் உள்ள கடைகள் பெரும்பாலானவை வாடகைக்கு எடுக்கப்பட்டவையே. விற்பனை நொடித்துப் போய் விட்டதால் வாடகையை கட்ட இவர்கள் திணறி
வருகிறார்களாம்.
திருட்டு சிடிக்களால் ஆண்டுதோறும் திரைத் துறைக்கு 160 பில்லியன் ரூபாய் அளவுக்கு நஷ்டம் ஏற்படுகிறது என்பது திரையுலகம் காட்டும் கணக்கு.
இந்த நிலையில், பொருளாதார நெருக்கடியால், திருட்டு சிடி பிசினஸ் நொடித்துப் போயிருக்கும் செய்தி, உண்மையிலேயே சினிமாக்காரர்களுக்கு சந்தோஷமான செய்தி என்பதில் சந்தேகம் இல்லை.