சிரஞ்சீவி கட்சிக்கு ரயில் எஞ்சின் சின்னம் ஒதுக்கீடு
டெல்லி: முதல் முதலாக தேர்தலை சந்திக்கும் நடிகர் சிரஞ்சீவியின் பிரஜா ராஜ்ஜியம் கட்சி்க்கு ரயில் என்ஜின் சின்னத்தை ஒதுக்குமாறு தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.முன்னதாக தனது கட்சிக்கு பொது சின்னம் ஒதுக்கக் கோரி சிரஞ்சீவி வைத்த கோரிக்கையை தேர்தல் ஆணையம் நிராகரித்துவிட்டது. இதனால் ஆந்திர மக்களவை, சட்டமன்றத் தேர்தல்களில் இவரது கட்சியினர் ஒவ்வொருவரும் ஒவ்வொரு சின்னத்தில் போட்டியிடும் நிலை ஏற்பட்டது.
இதையடுத்து சின்னம் கொண்ட சில செயல்படாத கட்சிகளை வாங்கிவிடும் முடிவில் அவர்களுடன் சிரஞ்சீவி பேசிப் பார்த்தார். அதுவும் சரிப்பட்டு வரவில்லை.
இதைத் தொடர்ந்து பொது சின்னமாக ரயில் என்ஜின் சின்னத்தை தனக்கு ஒதுக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இதை விசாரித்த நீதிமன்றம் அவரது கட்சிக்கு ரயில் எஞ்சின் சின்னத்தை ஒதுக்குமாறு தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டுள்ளது.
சீட் இல்லை-தொண்டர் தீக்குளிப்பு:
இதற்கிடையே தேர்தல் டிக்கெட் கிடைக்காத விரக்தியில் சிரஞ்சீவி கட்சியை சேர்ந்த தொண்டர் ஒருவர் தீக்குளித்தார்.
மெகப்பூப் மாவட்டம் நாகர் கர்ணூரை சேர்ந்த கண்ணய்யா தேர்தலில் போட்டியிட விரும்பினார். அவருக்கு சீட் தரப்படவில்லை. இதையடுத்து விரக்தியடைந்த அவர் ஹைதராபாத்தில் உள்ள கட்சி அலுவலகம் முன் தீக்குளித்தார்.
திருப்பதியில் 'தங்கமழை':
இந் நிலையில் திருப்பதி சட்டமன்றத் தொகுதியில் சிரஞ்சீவி போட்டியிடுவதால் அங்கு கடும் போட்டி நிலவுகிறது.
பெண்களுக்கு சேலைகள், வளையல்கள், மூக்குத்திகள், ஏழுமலையான் படம் பொறித்த தங்க டாலர்கள், இலவசமாக பாலாஜி தரிசன டிக்கெட்டுகள், திருமணம் ஆகாத பெண்களுக்கு தேவையான சீர்வரிசை என ஒவ்வொரு கட்சியும் வகை வகையான 'ஐயிட்டங்களை' வாக்காளர்களுக்கு வழங்க ஆரம்பித்துள்ளன.
2ம் கட்ட வேட்புமனு தாக்கல் இன்று ஆரம்பம்:
இதற்கிடையே மக்களவைத் தேர்தலுக்கான 2ம் கட்ட வேட்புமனு தாக்கல் இன்று துவங்குகிறது.
முதல் கட்ட வேட்புமனு தாக்கல் மார்ச் 23ம் தேதி துவங்கியது. இதையடுத்து 141 தொகுதிகளுக்கான இரண்டாம் கட்ட வேட்புமனு தாக்கல் இன்று துவங்குகிறது.
தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் ஏப்ரல் 17ம் தேதி துவங்குகிறது.