தமிழகம்-10% வாக்குச் சாவடிகள் பதற்றமானவை
நெல்லை: தமிழகத்தில் 10 சதவீத வாக்குச் சாவடிகள் பதற்றம் நிறைந்தவையாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக டிஜிபி ஜெயின் கூறினார்.
நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்ட போலீஸ் அதிகாரிகளுடன் தேர்தல் பாதுகாப்பு குறித்து அவர் நெல்லையில் ஆலோசனை நடத்தினார்.
தேர்தல் பாதுகாப்பு பணிகள், பதட்டம் மிகுந்த ஓட்டுசாவடிகள், தலைவர்கள் சுற்றுபயணத்திற்கு அளிக்க வேண்டிய பாதுகாப்பு பணிகள், கண்காணிப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடந்தது. தேர்தலுக்காக மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்புகளை டிஜிபி ஆய்வு செய்தார்.
பின்னர் டிஜிபி கூறியதாவது, தமிழகம் முழுவதும் சரக வாரியாக தேர்தலுக்கு செய்யப்பட வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு நடக்கிறது. ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள், என்சிசி, ஊர்காவல் படையினர், போலீசாருடன் இணைந்து பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர். தேர்தல் பாதுகாப்பு பணிக்கு போலீஸ் துறை தயாராகி வருகிறது.
கேரளா, ஆந்திரா, கர்நாடகா, போலீசாரும் தமிழகத்தில் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர். டெல்லியில் தேர்தல் கமிஷன் நடத்திய ஆய்வு கூட்டத்தில் தமிழகத்திற்கு தேர்தல் பாதுகாப்பு பணிக்கு தேவைப்படும் துணை ராணுவ படை குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிக அளவில் துணை ராணுவ படையினர் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர். தமிழகத்தில் பதட்டம் மிகுந்த ஓட்டுசாவடிகளை அடையாளம் காணும்பணி நடந்து வருகிறது.
சராசரியாக 10 சதவீதம் ஓட்டுசாவடிகள் பதட்டம் மிகுந்தவை என கண்டறியப்பட்டுள்ளது. அங்கு பாதுகாப்பை பலப்படுத்தி போலீஸ் ரோந்து வாகனங்களை கண்காணிப்பு பணியில் ஈடுபட செய்து தேர்தலை அமைதியாக நடத்த ஏற்பாடு செய்யப்படும்.
முன்னேச்சரிக்கை நடவடிக்கையாக தேர்தலுக்கு முன்பு ரவடிகளை கைது செய்யும் நடவடிக்கை துவக்கப்பட்டுள்ளது என்றார் ஜெயின்.