விரைவில் மதிமுகவே இருக்காது: மு.கண்ணப்பன்
சென்னை: விரைவில் மதிமுக காணாமல் போய் விடும். அங்கிருந்து மேலும் பலர் திமுவுக்கு வரத் துடித்துக் கொண்டிருக்கிறார்கள் என்று முன்னாள் மதிமுக அவைத் தலைவரும், சமீபத்தில் அங்கிருந்து தாவி திமுகவுக்கு வந்தவருமான மு.கண்ணப்பன் தெரிவித்துள்ளார்.
கண்ணப்பனைத் தொடர்ந்து நேற்று மதிமுக எம்எல்ஏ கம்பம் ராமகிருஷ்ணனும் திமுகவுக்குத் தாவினார். முதல்வர் கருணாநிதியை அவரது இல்லத்தில் சந்தித்து தன்னை திமுகவில் ஐக்கியப்படுத்திக் கொண்டார்.
அவருடன் கண்ணப்பன், தமிழக அரசின் டெல்லி பிரதிநிதி கம்பம் செல்வேந்திரன், தேனி மாவட்ட திமுக செயலாளர் மூக்கையன் உடன் வந்தனர்.
கருணாநிதியை சந்தித்து அவருக்கு கம்பம் ராமகிருஷ்ணன் பொன்னாடை போர்த்தி பூங்கொத்து வழங்கினார். கம்பம் ராமகிருஷ்ணனுக்கு கருணாநிதி பொன்னாடை போர்த்தி வாழ்த்தினார். அப்போது உள்ளாட்சித் துறை அமைச்சர் ஸ்டாலின் உடன் இருந்தார்.
பின்னர் வெளியில் வந்த கம்பம் ராமகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறுகையில், கம்பம் நடராஜன் குடும்பத்தை நாடும் நாடாளுமன்றமும் அறியச் செய்தவர் முதல்வர் கருணாநிதி. அவரது வழியில் தொடர்ந்து பணியாற்றவும் உழைக்கவும் எனக்கு வாய்ப்பு தந்திருக்கிறார். தாய்க் கழகமான திமுகவில் என்னை இணைத்திருக்கிறேன்.
மதிமுகவின் மாவட்டக் கழக நிர்வாகம் ஒழுங்கீனமாக இருக்கிறது. ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டவர்களே மதிமுக கட்சிக் கூட்டங்கள், போராட்டங்களில் கலந்து கொள்கிறார்கள். இது வேடிக்கையாகவும் கண் துடைப்பாகவும் உள்ளது. அதில் ஏற்பட்ட அதிருப்தி, அந்தக் கட்சியில் இருந்து என்னை வெளியேற வைத்தது.
அதுமட்டுமல்ல, கண்ணப்பனை எப்படிப்பட்ட கண்ணோட்டத்தோடு வைகோ பார்த்தாரோ அதே நோக்கத்தில் என்னையும் சந்தேகத்தோடு பார்த்தார். எனவே இனிமேலும் மதிமுகவில் இருக்க முடியாது என்ற நிலை ஏற்பட்டது. அதனால் வெளியேறினேன். எம்எல்ஏ பதவியை இன்றே ராஜினாமா செய்வேன்.
அண்ணன் மகனுக்கு சீட்டா...?:
எனது அண்ணன் மகனுக்கு தேனி தொகுதியில் திமுக சார்பில் சீட் தரப்படும் என்பதற்காக அந்தக் கட்சியில் நான் இணைந்தேன் என்று வைகோ கூறுவது பொய். எதையாவது கூற வேண்டும் என்பதற்காகவே அவர் அப்படி பேசுகிறார்.
நாடாளுமன்றத் தேர்தலில் திமுக சார்பில் நான் போட்டியிடுவது பற்றி தலைவர் முடிவெடுப்பார். தலைமை முடிவெடுக்கும். இதுவரை நான் 3 முறை போட்டியிட்டுயிருக்கிறேன்.
நானும் கண்ணப்பனும் என்ன முடிவு எடுத்து இருக்கிறோமோ அதையே மதிமுகவில் இருக்கும் மற்றவர்களும் எடுக்க வேண்டும் என்று கூறிக் கொள்கிறோம் என்றார்.
உடன் இருந்த கண்ணப்பன் பேசுகையில்,
மூக்கையாவுடன் இணைந்து தேனி மாவட்டத்தில் திமுகவை கம்பம் ராமகிருஷ்ணன் வலுப்படுத்துவார். தென் பகுதியில் மதிமுக என்பதே அடியோடு இல்லாமல் போகும்.
திமுக தென்மண்டல அமைப்புச் செயலாளர் மு.க.அழகிரியும் நானும் கம்பத்திற்கு சென்றபோது மதிமுக தொண்டர்கள் பலரும் வரவேற்பு அளித்தனர். அவர்களும் இங்கு வர காத்துக் கொண்டிருக்கிறார்கள் என்றார்.