டாடா நானோ வாங்க மாதச் சம்பளம் ரூ.6250 போதும்!
உலகமே வியக்கும் வகையில் ரூ.1 லட்சம் விலை கொண்ட நானோ காரை டாடா நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. மிகவும் விலை குறைவான இந்த கார், உலகம் முழுவதிலும் ஆட்டோமொபைல் துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனால் இந்த காரை வாங்க, நடுத்தர மக்களிடையே பெரும் ஆர்வம் எழுந்துள்ளது. இதனால் அவர்கள் நானோ காரை வாங்க போட்டி போட்டு முன்பதிவு விண்ணப்பம் பெற்று வருகிறார்கள். இதன் காரணமாக, நானோ கார், பதிவு செய்து 6 மாதங்களுக்கு பிறகே கிடைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அதுவும் குலுக்கல் மூலம் மட்டும் தேர்ந்தெடுக்கப்படும் நிலை உருவாகியுள்ளது.
இந்தநிலையில், நானோ காரை வாங்க விரும்பும் நடுத்தர மக்களுக்கும், இருசக்கர வாகனம் வாங்குவதையே கனவாக நினைத்திருப்போருக்கும் மகிழ்ச்சி அளிக்கக்கூடிய, நானோ காருடன் தொடர்புடைய செய்தியை பாரத ஸ்டேட் வங்கி அளித்துள்ளது.
இதன்படி, நானோ கார் வாங்க விரும்பும் குறைந்த வருவாய் கொண்டவர்களுக்கு கடனுதவியை அளிக்க திட்டமிட்டுள்ளது.
இதன்படி, ஆண்டு வருமானம் குறைந்தபட்சம் ரூ.75 ஆயிரம் ரூபாய் பெறும் மாத சம்பளக்காரர்களுக்கும், ஆண்டுக்கு ரூ.1 லட்சம் சம்பாதிக்கும் சுயதொழில் செய்பவர்களுக்கும் நானோ கார் வாங்க கடனுதவி அளிக்கப்படும் எனத் தெரிகிறது. எனவே, மாதம் ரூ.6,250 வருமானம் பெறுவோர் கடனுதவி பெறமுடியும்.
தற்போது, மாத வருமானம் பெறுவோருக்கும், சுயதொழில் செய்பவர்களுக்கும், கார் வாங்குவதற்கு ரூ.1 லட்சம் ஆண்டு வருமானம் இருக்க வேண்டும் என்ற உச்சவரம்பை வங்கி நிர்ணயித்துள்ளது. ஆனால், டாடா நானோ காரானது, குறைந்த வருவாய் உள்ளவர்களை மனதில் வைத்து தயாரிக்கப்பட்டுள்ளதால், அந்த வருமான வரம்பினை தளர்த்த முடிவு செய்திருப்பதாக பாரத ஸ்டேட் வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.
நானோ காரானது ரூ.1.25 லட்சம், ரூ.1.40 லட்சம் மற்றும் ரூ.1.70 லட்சம் (இந்த 3 கார்களின் விலையும், நகரத்துக்கு, நகரம் சிறிதளவு வேறுபடுகிறது) என்று 3 மாடல்களில் கிடைக்கிறது. முதல் மாடல் காரை வாங்குவதற்கு ரூ.3 ஆயிரமும், 2-வது ரக காரை வாங்க ரூ.3,500-ம், 3-ம் ரக காரை வாங்குவதற்கு ரூ.4 ஆயிரமும் பாரத ஸ்டேட் வங்கியில் முன்தொகையாக கட்டவேண்டும்.
இந்த கார்களில் ஏதேனும் ஒரு மாடல் கார், வாடிக்கையாளருக்கு டாடா நிறுவனம் ஒதுக்கியதும், மேலே கூறப்பட்டுள்ள வருவாய் உள்ளவர்கள், பாரத ஸ்டேட் வங்கியை அணுகலாம். அதிகபட்சம் 7 ஆண்டு காலம் வரை, திருப்பிச் செலுத்தும் வகையில் கடன் வழங்கப்படும்.
வட்டி விகிதம் 11.75 முதல் 12 சதவீதம் வரை இருக்கும். ஒரு லட்சம் ரூபாய் கடன் பெற விரும்பினால் ரூ.15 ஆயிரத்தை முன்பணமாக செலுத்த வேண்டியிருக்கும்.