டெல்லி சீக்கியர் படுகொலை - தப்புகிறார் ஜெகதீஷ் டைட்லர்?
டெல்லி: இந்திரா காந்தி படுகொலையைத் தொடர்ந்து டெல்லியில் சீக்கியர்கள் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ஜெகதீஷ் டைட்லர் மீதான இறுதி விசாரணையை சிபிஐ டெல்லி கோர்ட்டில் தாக்கல் செய்துள்ளது. அதில் டைட்லர் குற்றமற்றவர் என தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மூடப்பட்ட உறையில் வைத்து இந்த விசாரணை அறிக்கையை பெருநகர மாஜிஸ்திரேட் ராம் லால் மீனாவிடம் சிபிஐ தாக்கல் செய்துள்ளது. ஏப்ரல் 2ம் தேதி இந்த அறிக்கையை டெல்லி கோர்ட் பிரித்துப் படிக்கவுள்ளது.
டெல்லி வன்முறைக்கு டைட்லரே காரணம் என்பது குற்றச்சாட்டாகும். ஆனால் அவர் மீதான குற்றச்சாட்டுக்கு எந்த ஆதாரமும் இல்லை. அவருக்கு எதிராக சாட்சியம் அளித்தவரின் சாட்சியம் நம்பும்படி இல்லை என்று சிபிஐ தனது அறிக்கையில் கூறியுள்ளதாக தெரிகிறது.
வரும் நாடாளுமன்றத் தேர்தலில் டைட்லருக்கு காங்கிரஸ் கட்சி வட கிழக்கு டெல்லி தொகுதியில் சீட் கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கலிபோர்னியாவைச் சேர்ந்த ஜஸ்பீர் சிங் என்பவர் டைட்லருக்கு எதிராக சாட்சியம் அளித்திருந்தார்.
சீக்கியர்களுக்கு எதிரான கலவரம் குறித்து விசாரிக்க நியமிக்கப்பட்ட நானாவதி கமிஷன் முன்பு ஜஸ்பீர் சிங் வாக்குமூலம் அளித்திருந்தார்.
அதில், 1984ம் ஆண்டு நவம்பர் 3ம் தேதி, தனது தொகுதியில் சீக்கியர்களைப் படுகொலை செய்யுமாறு டைட்லர் உத்தரவிட்டதாக கூறியிருந்தார்.