திண்டுக்கல் பஞ்சாலைகளில் தொடரும் இளண் பெண் கொலைகள்
திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே ஒரு தனியார் மில்லில் மர்மமான முறையில் இறந்த ஒரு பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் சுமார் 50க்கும் மேற்பட்ட பஞ்சாலைகள் உள்ளன. இதில் நூற்றுக்கணக்கான இளம் பெண்கள் பணியாற்றுகின்றனர்.
இவர்கள் பஞ்சாலைகளில் கேம்ப் கூலி, சுமங்கலி போன்ற பெயர்களில் நடக்கும் திருமண திட்ட முறையில் பஞ்சாலை வளாகத்தில் இருக்கும் விடுதியில் தங்கி வேலை செய்து வருகின்றனர்.
இவ்வாறு பணிக்கு வரும் இளம் பெண்களில் சிலர் மர்மமான முறையில் மரணமடையும் சம்பவம் சமீபகாலமாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
திண்டுக்கல் வடமதுரை அருகே உள்ளது மூகாம்பிகை ஸ்பின்னிங் மில். தனியாருக்குச் சொந்தமான இந்த ஆலை வளாகத்திற்குள் மர்மமான முறையில் இறந்த ஒரு பெண்ணின் சடலம் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அழுகிய நிலையில் இருந்த அந்த சடலத்தை காவல்துறையினர் கைப்பற்றி மருத்துவர்களைக் கொண்டு மில் வளாகத்திலேயே பிரேத பரிசோதனை செய்துள்ளனர்.
இந்த ஆண்டு இதுவரை பத்துக்கும் மேற்பட்ட பெண்கள் இவ்வாறு கொலையாகியுள்ளனர். இதனால் பஞ்சாலைகளில் பணியாற்றும் பெண்களிடையே பீதி காணப்படுகிறது.
திண்டுக்கல் மாவட்டத்தில் பல ஆலைகளில் இது போன்று பணிபுரியும் பெண்கள் மர்மமான முறையில் இறந்து போகும் சம்பவம் தொடர்ந்து நடப்பதாக சிஐடியூ தொழிற் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.
எனவே, இந்த பிரச்சனையில் உண்மையை கண்டறிய சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று தமிழக அரசு்ககு கோரிக்கை விடுத்துள்ளது.