தமிழர் ஓட்டு-குறி வைக்கும் கர்நாடக பாஜக
ஷிமோகா: நாடாளுமன்ற தேர்தல் முடிந்தவுடன் கர்நாடகவில் இருக்கும் தமிழர்கள் பிரச்சினை குறித்து ஆலோசித்து தீர்வு காணப்படும் என கர்நாடக முதல்வர் எடியூரப்பா கூறினார்.
ஷிமோகாவில் மாவட்ட தமிழர் மாநாட்டை கர்நாடக முதல்வர் எடியூரப்பா துவக்கி வைத்தார். அப்போது அவர் பேசுகையில்,
மாநில கட்சிகளின் பிறப்பிடமாக தமிழகம் விளங்குகிறது. ஜெயலலிதா, ரஜினிகாந்த், நாகேஸ் மற்றும் அர்ஜூன் போன்ற கர்நாடகத்தைச் சேர்ந்தவர்கள் தமிழகத்தில் புகழ் பெற்று விளங்குகின்றனர்.
நாமெல்லாம் சகோதரர்கள்...!
திராவிட மொழிகளான தமிழ், கன்னடம், தெலுங்கு மற்றும் மலையாளம் பேசும் அனைவரும் சகோதரர்கள். தமிழைத் தொடர்ந்து கன்னடம் மற்றும் தெலுங்கிற்கு செம்மொழி அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.
தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து பெற்றதில் உங்களுக்கு இருக்கும் மகிழ்ச்சி எனக்கும் இருக்கிறது. மற்ற மொழிகளை நேசி, உனது மொழியில் உயிர் வாழ் என காந்தியடிகள் கூறியுள்ளார். தமிழர்கள் தன்மானம் மிக்கவர்கள், தைரியசாலிகள், உண்மையானவர்கள், நம்பிக்கைக்குரியவர்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
தமிழர்களில் பலர் ஏழைகளாக் இருந்தாலும், உழைத்து வாழ்ந்து வருகிறார்கள். குழந்தைகளின் கல்வி அறிவில் அக்கறை காட்டுங்கள்.
கர்நாடகவில் பெண்கள் முன்னேற்றத்துக்காக பாக்யலட்சுமி என்ற திட்டத்தை கொண்டு வந்துள்ளோம். இதை தமிழ் தாய்மார்களும் பயன்படுத்தி கொள்ள வேண்டும். தனது பெண் குழந்தை படித்து நல்ல வளர்ச்சி காண்பதில் தாய்மார்கள் அதிக விழிப்புடன் இருக்க வேண்டும். பெண் கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுங்கள்.
ஷிமோகா இந்த மாநாட்டில் பங்கேற்க ஆயிரக்கணக்கான தமிழர்கள் வந்துள்ளார்கள். இது கர்நாடக வரலாற்றில் மறக்க முடியாத நாள். தமிழர்கள் அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட்டால் சமுதாயம் முன்னேறும். பிரச்சினை வரும் சமயத்தில் நாம் அனைவரும் ஒரு தாய்-பிள்ளைகளாக பழக வேண்டும்.
மழை பெய்தால், காவிரி பிரச்னை வராது. மழை பெய்யவில்லை என்றால் தான் பிரச்சனை. நாடாளுமன்ற தேர்தல் முடிந்தவுடன் தமிழ் தலைவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட இருக்கிறேன். கர்நாடகத்தில் தமிழர்களின் பிரச்சனைக்கு தீர்வு காண்பேன் என இந்த மேடையில் உறுதியளிக்கிறேன் என்றார் எடியூரப்பா.
கடந்த சட்டமன்றத் தேர்தலில் பாஜகவுக்கு தெலுங்கு மொழி பேசுவோரின் வாக்குகளும் காங்கிரசுக்கு தமிழர்களின் வாக்குகளும் கிடைத்தன.
இந்த மக்களவைத் தேர்தலில் தமிழர்களின் வாக்குகளை குறி வைத்துள்ளது பாஜக என்பது குறிப்பிடத்தக்கது.