அதிமுக-சிபிஎம் இழுபறி: ஜெவை சந்திக்கிறார் காரத்
சென்னை: தொகுதிப் பங்கீடு தொடர்பாக அதிமுக, மார்க்சிஸ்ட் மாநிலத் தலைவர்களிடையே இழுபறி நிலவி வந்ததையடுத்து இதில் சிபிஎம் தேசியச் செயலாளர் பிரகாஷ் காரத் தலையிட்டுள்ளார்.
இதையடுத்து அதிமுக தரும் தொகுதிகளை ஏற்றுக் கொள்வது என மார்க்சிஸட் முடிவுக்கு வந்துள்ளது. இதையடுத்து இன்றே பிரகாஷ் காரத் போயஸ் கார்டன் சென்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை சந்தித்து பேசுகிறார். அப்போது தொகுதி உடன்பாட்டில் இரு தலைவர்களும் கையெழுத்திடுவர் என்று தெரிகிறது.
ஒண்ணு கூடுதலாக கேட்கும் மார்க்சிஸ்ட்...
முன்னதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தனக்கு 4 தொகுதிகளைக் கேட்டு அடம்பிடித்து வந்தது.
இந்திய கம்யூனிஸ்டை விட நாங்கள் பலமான கட்சி. கடந்த முறை கடைசி நேரத்தில் திமுக எங்களுக்கும் இந்திய கம்யூனிஸ்ட்டுக்கும் தலா 2 சீட்களைத் தந்து பங்கீட்டை முடித்துவிட்டது. அதே நிலை இப்போதும் தொடர்வதை எங்களால் ஏற்க முடியாது.
எனவே இந்திய கம்யூனிஸ்ட்டுக்கு தருவதை விட ஒரு தொகுதியாவது எங்களுக்கு கூடுதலாக ஒதுக்க வேண்டும் என்கிறது மார்க்சிஸ்ட் கம்யூனி்ஸ்ட். அதாவது இந்திய கம்யூனிஸ்டுக்கு 3 தொகுதிகள் தரப்பட்டுள்ளதால் தனக்கு 4 தொகுதிகளைக் கேட்டது.
தங்களுக்கு திருப்பூர், மதுரை, கோவை, நாகர்கோவில் ஆகிய தொகுதிகளைக் கேட்டது மார்க்சிஸ்ட்.
ஆனால் இந்திய கம்யூனிஸ்டுக்கு தந்ததைப் போலவே 3 மட்டுமே தர முடியும் என்றது அதிமுக. இதனால் தொகுதிப் பங்கீட்டில் சிக்கல் நீடித்தது.
மேலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வடசென்னை, நாகப்பட்டனம் தொகுதிகளை கேட்டிருந்தது. ஆனால் அவற்றை இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு அதிமுக ஒதுக்கி விட்டது.
இதனால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அதிருப்தி அடைந்துள்ளது. இதன் காரணமாக அக்கட்சியின் தொகுதிகளை முடிவு செய்வதிலும் இழுபறி காணப்பட்டது.
''எதுவும் சொல்வதற்கு இல்லை''...
இந் நிலையில் நேற்று 2 மணி நேரம் பேசிவிட்டு இரவு பத்தே கால் மணியளவில் ஜெயலலிதா வீட்டிலிருந்து வெளியே வந்தார் மார்க்சிஸ்ட் தலைவர் வரதாஜன். அவரிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, பேச்சுவார்த்தை நடக்கிறது. வேறு எதுவும் சொல்வதற்கில்லை என்று கூறி விட்டுச் சென்று விட்டார்.
இந் நிலையில் அதிமுகவுடன் தொகுதி பங்கீடு பற்றி பேச்சுவார்த்தை நடத்துவதற்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தேசியச் செயலாளர் பிரகாஷ் காரத் இன்று சென்னை வந்தார்.
தியாகராய நகரில் உள்ள தனது கட்சி அலுவலகத்தில் நிர்வாகிகளுடன் அவர் ஆலோசனை நடத்தினார். மாநிலச் செயலாளர் வரதராஜன், தலைவர்கள் ராமகிருஷ்ணன், சங்கரய்யா, டி.கே.ரங்கராஜன், உமாநாத் ஆகியோர் இதில் கலந்து கொண்டனர்.
பேச்சுவார்த்தையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு அதிமுக ஒதுக்கும் தொகுதிகளை ஏற்றுக் கொள்ளவது என முடிவு செய்யப்பட்டதாகத் தெரிகிறது.