பயணிகள் மீது சந்தேகம்-நிறுத்தப்பட்ட விமானம்
டெல்லி: விமானத்தில் வந்த பயணிகள் மீது ஏற்பட்ட சந்தேகம் காரணமாக டெல்லியிலிருந்து கொல்கத்தாவுக்கு கிளம்பிய விமானம் அவசரமாக நிறுத்தப்பட்டது. விசாரணையில் அந்த நபர்கள் பாதுகாப்பு படையினர் என்பது தெரியவந்ததை அடுத்து விமானம் மீண்டும் பறந்தது.
ஏர் இந்தியாவின் ஐசி 401 விமானம் நேற்று காலை 7 மணிக்கு டெல்லியிலிருந்து கொல்கத்தா நோக்கி கிளம்ப தயாராகி கொண்டிருந்தது. ரன்-வேயில் வேகமாக ஓடத் துவங்கியது.
அந்த விமானத்தில் வேலை முடிந்து சொந்த ஊரான கொல்கத்தாவுக்கு திரும்பி கொண்டிருந்த ஏர் இந்தியா விமான பணிப்பெண் ஒருவரும் இருந்தார். அவருக்கு தனது அருகில் அமர்ந்து இருந்த மூன்று பயணிகளின் நடவடிக்கையில் திடீரென சந்தேகம் எழுந்தது.
இதையடுத்து அவர் பணியில் இருந்த விமானப் பணிப்பெண்கள் மூலம் விமானிக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து அவசரமாக செயல்பட்ட விமானி கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டு நிலைமையை விளக்கினார்.
பின்னர் ரன்-வேயில் நகர்ந்து கொண்டிருந்த விமானம் நிறுத்தப்பட்டு
அந்து மூன்று பயணிகளிடமும் விமான நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர்கள் பாதுகாப்பு படையினர் என்பதும், அவர்கள் பணி நிமித்தாக கொல்கத்தா சென்று பின்னர் அங்கிருந்து இம்பால் செல்ல இருப்பதும் உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து விமானம் மீண்டும் கொல்கத்தா சென்று சேர்ந்தது.