சென்னை-14 உயர்நீதிமன்ற நீதிபதிகள் பதவியேற்பு
சென்னை: சென்னை உயர்நீதிமன்றத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்ட 14 கூடுதல் நீதிபதிகளும் இன்று பதவியேற்றுக் கொண்டனர். தலைமை நீதிபதி எச்.எல்.கோகலே அவர்களுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் மதுரை கிளையின் மொத்த நீதிபதிகள் பலம் 60 ஆகும். ஆனால், 44 நீதிபதிகளே இருந்தனர்.
இந்தநிலையில் சமீபத்தில் புதிதாக 14 கூடுதல் நீதிபதிகளுக்கான நியமனத்திற்கு குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் ஒப்புதல் அளித்தார்.
இதையடுத்து புதிதாக நியமிக்கப்பட்ட நீதிபதிகளான ஆர்.எஸ். ராமநாதன், டி.எஸ்.சிவஞானம், ராஜ இளங்கோ, சி.டி. செல்வம், டி.ராஜா, எம்.எம்.சுந்தரேஷ், சி.எஸ்.கர்ணன், ஹரி பரந்தாமன், என்.கிருபாகரன், பி.ராஜேந்திரன், எம்.துரைசாமி, உயர்நீதிமன்றப் தலைமைப் பதிவாளர் மாலா, கண்காணிப்புப் பதிவாளர் அருணா ஜெகதீசன், தேசிய சட்ட சேவை ஆணையத்தின் உறுப்பினர் செயலாளர் ஜி.எம். அக்பர் அலி ஆகியோர் இன்று பதவியேற்றுக் கொண்டனர்.
அவர்களுக்கு தலைமை நீதிபதி எச்.எல்.கோகலே பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
புதிய நீதிபதிகளில் 11 பேர் வக்கீல்களாக இருந்தவர்கள். மற்றவர்கள் மாவட்ட நீதிபதிகள் ஆவர்.
இவர்களையும் சேர்த்து தற்போது நீதிபதிகளின் எண்ணிக்கை 58 ஆக உயர்ந்துள்ளது. இன்னும் 2 இடங்கள் காலியாக உள்ளன.