காங். பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டுவீசியவர் கைது
சென்னை: தமிழ்நாடு மாநில காங்கிரஸ் காரிய கமிட்டியின் உறுப்பினர் பிரகாஷ் வீட்டில் குண்டுவீசயவர்களில் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். மற்றொருவரை தேடி வருகின்றனர்.
தமிழ்நாடு மாநில காங்கிரஸ் காரிய கமிட்டியின் உறுப்பினராக இருப்பவர் பிரகாஷ். நேற்று முன்தினம் இரவு அவர் தனது வீ்ட்டில் தூங்கி கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம கும்பல் ஒன்று அவர் வீட்டில் பெட்ரோல் குண்டை வீசிவிட்டு தலைமறைவானது.
இதையடுத்து அவர் வீட்டு பால்கனி மற்றும் அறை முழுவதும் எரிந்து நாசமானது. இதையடுத்து பிரகாஷ், சேத்துப்பட்டு போலீசுக்கு உடனடியாக தகவல் தெரிவித்தார்.
கீழ்ப்பாக்கம் உதவி கமிஷனர் ராஜாமணி தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு உடனடியாக விரைந்து விசாரணை நடத்தினர்.
இதில் முன்விரோதம் காரணமாக அதே பகுதியை சேர்ந்த சுகுமார், ரமேஷ் ஆகிய இருவரும் பெட்ரோல் குண்டுகளை வீசியிருக்கலாம் என சந்தேகம் எழுந்தது. இதையடுத்து போலீசார் அவர்களை தேடினர்.
ஆனால், ரமேஷ் தலைமறைவாகி விட்டார். சுகுமாரை பிடித்த போலீசார் அவரை விசாரித்தனர்.
அப்போது சுகுமார் உண்மையை ஒப்புக்கொண்டார். அவர் கூறுகையில்,
ரமேஷ் எனது நண்பர். அவரது அண்ணன் ராஜேசை சமீபத்தில் ஒரு வழக்கில் பிரகாஷ் போலீசிடம் மாட்டிவிட்டார். இதனால் வருத்தம் அடைந்த ராஜேஷ் இரண்டு நாட்களுக்கு முன்னர் நன்றாக குடித்துவிட்டு அந்த பகுதியில் ரகளை செய்தார்.
அவரது திட்டத்தின் படி தான் நானும், ரமேசும், பிரகாஷ் வீட்டில் பெட்ரோல் குண்டுகளை வீசினோம். அவர்களை கொலை செய்ய நினைக்கவில்லை. பயமுறுத்துவதற்காக தான் அவ்வாறு செய்தோம் என்றார்.
இதையடுத்து சுகுமாரை கைது செய்த போலீசார். ரமேசை தேடி வருகின்றனர்.