எஸ்எஸ்எல்சி ஆள்மாறாட்டம்-8 மாணவர்கள் கைது
கடலூர்: எஸ்எஸ்எல்சி தேர்வில் ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்டு தேர்வு விதிமுறைகளை மீறிய 3 மாணவர்கள் உட்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
கடலூர் அருகே திருப்பாலிபுலியூர் புனித வளானார் மேல்நிலைப்பள்ளியில் பிஎன் பாளையத்தை சேர்ந்த முருகதாஸ், புதுச்சேரி உய்யவாய்க்கால்லை சேர்ந்த குமரன், புதுச்சேரியை சேர்ந்த புஷ்பலிங்கம் ஆகிய மூவருக்கு பத்தாம் வகுப்பு தனித்தேர்வு எழுத அனுமதி கொடுக்கப்பட்டிருந்தது.
ஏற்கனே ஆங்கில தேர்வை பல முறையும் எழுதியும் தோல்வி கண்ட இவர்கள் இம்முறை எப்படியும் பாஸ் செய்துவிட வேண்டும் என்ற எண்ணத்தில் தவறான முறையை கையாண்டுள்ளனர்.
ஆங்கில தேர்வை தங்களுக்கு பதிலாக எழுத கடலூரை அடுத்த சிங்கிரிகுடி சுப்பையா மகன் தணிகாசலம்(17), அய்யனார் மகன் ஆனந்த்பாபு (16), தெய்வசிகாமணி மகன் சந்திரன்(16) ஆகிய மூன்று பேரை தேர்வு எழுத செய்துள்ளனர். இவர்கள் மூவரும் கடலூர் நகராட்சி மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 1 படித்து வருகின்றனர்.
இவர்களுக்கு அவர்களுக்கு பதிலாக நேற்று ஆங்கில தேர்வு எழுதி கொண்டிருந்தனர். அப்போது அந்த தேர்வு கூடத்துக்கு கடலூர் நகராட்சி ஆசிரியர் ஒருவர் கண்காணிப்பாளராக வர இவர்கள் மூவரும் தங்களது பள்ளியில் பிளஸ் 1 படிப்பவர்கள் என்பதை அறிந்த அந்த ஆசிரியர் உடனடியாக பள்ளி தலைமை ஆசிரியருக்கு தகவல் கொடுத்தார்.
ஆசிரியர்களின் விசாரணையில் அந்த மாணவர்கள் தங்களது ஆள்மாறாட்டத்தை ஒப்புக்கொண்டனர். இதையடுத்து போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் தணிகாசலம், சந்திரன், ஆனந்த்பாபு, முருகதாஸ், புஷ்பலிங்கம் ஆகியோரை கைது செய்தனர்.
இதேபோல் விழுப்புரத்தில் 10ம் வகுப்பு தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த சாரத்குமார், மோகன் ராஜ், அஜித் குமார் ஆகிய மூன்று மாணவர்களை போலீசார் கைது செய்தனர். பின்னர் இவர்கள் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டனர்.