வைகோ..அழைப்புக்காக காத்திருந்து காத்திருந்து...!
சென்னை: தொகுதி உடன்பாடு குறித்து பேச்சு நடத்த அதிமுகவிடமிருந்து அழைப்பு வரும் என நேற்று இரவு வரை காத்திருந்தார் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ. ஆனால், அழைப்பு வரவில்லை.
நேற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன் உடன்பாடு ஏற்பட்டுவிட்டால் அடுத்து மதிமுகவை அழைத்துப் பேச அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா திட்டமிட்டிருந்தார்.
ஆனால், மதிமுக கேட்டுள்ள திருப்பூர் தொகுதியைக் கேட்டு மார்க்சிஸ்ட் அடம் பிடித்ததால் தொகுதி உடன்பாடு ஏற்படவி்ல்லை. இரவு 9 மணி வரை பேசியும் சிக்கல் தீரவில்லை.
இதனால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர்கள் சென்ற பின்னர் வைகோவை அழைத்துப் பேசுவதாக இருந்த ஜெயலலிதா அந்தத் திட்டத்தை கைவிட்டார்.
இதனால் இன்று வைகோவுக்கு ஜெயலலிதாவிடம் இருந்து அழைப்பு வரலாம் என்று தெரிகிறது.
மதிமுக இடங்கள் குறைப்பு?:
ஆரம்பத்தில் 6 இடங்கள் கேட்ட வைகோ, பாமகவுக்கு ஜெயலலிதா 7 தொகுதிகள் தந்தால் அதே அளவு இடங்கள் கேட்டார். ஆனால், மதிமுகவுக்கு அதிகபட்சம் 5 இடங்கள என்று கூறிவிட்டார் ஜெயலலிதா.
இந் நிலையில் சமீபத்தில் மதிமுகவிலிருந்து பல தலைவர்கள் வெளியேறியதையடுத்து அந்தக் கட்சிக்கு ஒதுக்க இருந்த இடங்களில் ஒன்றை ஜெயலலிதா குறைக்கலாம் என்றும் பேச்சு எழுந்துள்ளது.
குறிப்பாக அவைத் தலைவர் மு.கண்ணப்பன் வெளியேறியதால் பொள்ளாச்சி தொகுதியை மதிமுகவுக்கு அதிமுக தருமா என்பது சந்தேகத்திற்கிடமாகியுள்ளது.
ஆனால், தனது கட்சிக்கு ஒதுக்கப்படும் இடங்களை ஜெயலலிதா குறைக்க வேண்டும் என்பதற்காகவே தேர்தல் நேரமாகப் பார்த்து தலைவர்கள், எம்எல்ஏக்கள், நிர்வாகிகளை முதல்வர் கருணாநிதி திமுகவுக்குள் இழுத்து வருவதாக வைகோ விசுவாசிகள் கவலையுடன் கூறுகின்றனர்.
மேலும் அதிமுக கூட்டணியில் பாமக, இடதுசாரிகள் சேருவதற்கு முன்பே சேர்ந்தவர் வைகோ. ஆனால், அவருடன் தான் தொகுதிப் பங்கீடு குறித்து கடைசியாக உடன்பாடு காணப் போகிறார் ஜெயலலிதா.
நல்ல மரியாதை...